ஸ்டாலினின் பவர் பிளே.. காங்கிரஸ் வேணுகோபாலை சந்திக்க மறுப்பு.. ஏமாற்றத்துடன் திரும்பிய ராகுலின் தூது
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், சென்னைக்கு வந்து முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பியிருப்பது, அறிவாலயத்திற்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையிலான பனிப்போரை தீவிரப்படுத்தி உள்ளது..
கடந்த சில வாரங்களாகவே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் நாங்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இருப்பினும், திமுக தரப்பு இதற்கு ஆரம்பத்திலிருந்தே முரண்பட்டு வருகிறது. அதிகாரப் பகிர்வு என்பது தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஒத்து வராது என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது.
தொடரும் மோதல்: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய காங்கிரஸ் புள்ளிகள்
கடந்த சில வாரங்களாகவே, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் திமுக அரசின் மீதும், அதன் பொருளாதாரக் கொள்கைகள் மீதும் முன்வைத்த விமர்சனங்கள் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, "2006-ல் கூட்டணி ஆட்சியில் அமராதது காங்கிரஸ் செய்த தவறு" என்ற மாணிக்கம் தாகூரின் பேச்சும், தமிழகத்தின் கடன் சுமை குறித்து பிரவீன் சக்ரவர்த்தி எழுப்பிய கேள்விகளும் திமுக மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் காங்கிரஸை "பழைய பாரம்" என்று விமர்சிக்கத் தொடங்கினர். "துணை முதல்வர் பதவி", "அதிகாரப் பகிர்வு" என காங்கிரஸ் நிர்வாகிகள் போடும் கணக்குகள் எதற்கும் இடமில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் தனது பொதுக்கூட்டப் பேச்சுகள் மூலம் சூசகமாக உணர்த்தினார்.
ஸ்டாலினின் 'செக்': வேணுகோபாலுக்குக் கிடைக்காத அப்பாயிண்ட்மெண்ட்
இந்தச் சூழலைச் சரிசெய்யவே கே.சி. வேணுகோபால் சென்னைக்கு விரைந்தார். விமான நிலையம் அருகிலேயே முகாமிட்டு, முதல்வரைச் சந்திக்க நேரம் கோரியிருந்தார். ஆனால், "சட்டமன்றக் கூட்டத்தொடர் நடப்பதால் நேரம் ஒதுக்க முடியாது" என அறிவாலயம் மிகச் சாதாரணமாகக் கைவிரித்துவிட்டது.
"வெறும் சட்டமன்றக் கூட்டத்தொடர் காரணமல்ல, இது ஒரு அரசியல் மெசேஜ்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கூட்டணிக்குள் குழப்பம் விளைவிப்பவர்கள் மீது டெல்லி தலைமை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? வேணுகோபாலின் "அதிகாரப் பகிர்வு கேட்பது அவரவர் உரிமை" என்ற கருத்து, திமுகவை மேலும் உசுப்பியுள்ளது.
நேரடியாக 'மேடம்' உடன் பேச்சு?
அறிவாலய வட்டாரங்கள் கூறுவது இதுதான்: "மாநிலத் தலைவர்களிடமோ அல்லது வேணுகோபாலிடம் பேசுவதாலோ பலனில்லை. ராகுல் காந்தியின் நிழலாக இருக்கும் தலைவர்களே கூட்டணிக்கு எதிராகப் பேசும்போது, யாரிடம் பேசுவது? அதனால் தான், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சோனியா காந்தியிடமே பேசி இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னரே இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல், தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தலாம். வேணுகோபாலின் ஏமாற்றம், காங்கிரஸை புதிய வியூகங்களை நோக்கித் தள்ளுமா அல்லது அடிபணிந்து போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications