“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!
சென்னை: தமிழ் மண்ணில் நின்று மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? என மத்திய அமைச்சர்களுக்கும், எடப்பாடி பழனிசாமியால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில் பெற்றுத் தர முடியுமா? என எடப்பாடி பழனிசாமிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மத்திய அமைச்சர்கள் 6 பேர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், பாஜக அமைச்சர்களுக்கு கேள்வி எழுப்பி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில்,
"தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய பாஜக அமைச்சர்களும், பாஜக முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
• தமிழ் மண்ணில் நின்று, 'மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்' என்று சொல்லி பிரச்சாரம் செய்யத் தயாரா?
• நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பாஜகவால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
• கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
• இவற்றுக்கெல்லாம், எடப்பாடி பழனிசாமியால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில் பெற்றுத் தர முடியுமா?
• கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழகத்தை துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications