தமிழக இளைஞர்களை புறக்கணித்து... பிற மாநிலத்தவருக்கு பணி வழங்குவதா..? TNPSC-க்கு ஸ்டாலின் கண்டனம்..!
சென்னை: தொல்லியல்துறை அலுவலருக்கான தேர்வில் தமிழக இளைஞர்களை புறக்கணித்து பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்கு தொல்லியல் அலுவலர் பதவித் தேர்வில் நேர்ந்துள்ள அநீதியைக் களைய முதலமைச்சர் பழனிசாமி உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

எதிர்ப்பு
தொல்லியல் அலுவலருக்கான தேர்வில் தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு பயின்றவர்களுக்கு வேலையில்லை என்று, அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுத்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிற மாநிலங்களில் பயின்ற தொல்லியல்துறை மாணவ மாணவிகளைக் கலந்தாய்வுக்கு அழைத்துள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஏன், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற மாணவ - மாணவியரை நிராகரிக்கிறது?

ஒதுக்குவது ஏன்?
அங்கு ஓராண்டு முதுகலைத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பட்டயம் பெற்ற மாணவ மாணவியருக்கு ஓரவஞ்சனை செய்து ஒதுக்குவது ஏன்? தமிழகத்தில் படிப்போருக்குத் தமிழ்நாட்டில் வேலை கொடுக்க மறுப்பது ஏன்? பிற மாநில மாணவர்களை அழைத்ததோடு மட்டுமின்றி, Other Category என்ற பிரிவிலிருந்து இரு மாணவர்களை இந்தக் கலந்தாய்வுக்கு அழைத்ததன் மர்மம் என்ன?

கண்டனத்திற்குரியது
தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளில் நான்கில் மூன்று பங்கு தமிழில்தான் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது தமிழ் படித்த மாணவ - மாணவியருக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பது அராஜகமானது; கடும் கண்டனத்திற்குரியது. இந்த விண்ணப்பங்களில் தமிழ் மொழி பயின்றதற்கான முன்னுரிமை இடஒதுக்கீடு கோருபவரா என்று கூடக் கேள்வி எழுப்பாமல், ஒரு விண்ணப்பப் படிவத்தை வெளியிட்ட தேர்வாணையம், தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் படித்தவர்களைப் புறக்கணிப்பதை அ.தி.மு.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கவலைக்குரியது
நிராகரிக்கப்பட்ட மாணவ - மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் என்பது இன்னொரு கொடூரம். தமிழக தொல்லியல் நிறுவனத்தில் பயின்ற மாணவ - மாணவியர் இன்றைக்கு மிகப்பெரிய ஆய்வாளர்களாக - அறிஞர்களாக இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தேர்வாணையமே பிற மாநிலத்தவருக்கு வாய்ப்பளிப்பதும், இந்தத் தேர்வில் தமிழக மாணவ - மாணவியரைப் புறக்கணிக்கும் வகையில் தேர்வுகளை நடத்துவதும் மிகுந்த கவலைக்குரியது.

குளறுபடிகள்
எனவே, தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர்வில் நடைபெற்றுள்ள இந்தக் குளறுபடிகளுக்கு உடனடியாகத் தீர்வு கண்டு, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற தமிழக மாணவ மாணவியர்க்கு வேலை வாய்ப்பு வழங்கிட, அவர்களைக் கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications