இனிமேல் இந்த ஆய்வு கட்டாயம்! அமைச்சர்களுக்கு ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்தின் மீது முதல்வர் தனிக் கவனம்
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும் என அனைத்து அமைச்சர்களுக்கும் ஸ்டாலின் மிக சீரியஸாக அறிவுறுத்தியுள்ளார்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என எந்த திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என்பதை சூசகமாக அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்;

அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்
''நாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அந்த வளர்ச்சி வளங்குன்றா, நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். வளர்ச்சி ஒரு கண் என்றால் - காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண். ஆகவே இந்த இரு கண்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தேவை. அதற்கான பாதையை இந்தக் குழு வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இனிமேல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று துறை அமைச்சர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.''

மனிதநலன்
''இனிமேல் மனிதநலன் என்ற ஒன்றே கிடையாது என்பதை உணர்ந்து கொண்டுதான் இந்த திராவிட மாடல் அரசு "ஒருங்கிணைந்த நலன்" (One Health) என்கிற கொள்கையை உறுதியாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது. இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை கையாளுவது போல், நாம் வெப்ப அலைகளையும், புதிய புதிய நோய்களையும் கையாளத் தயாராக வேண்டும். ''

2070-ஆம் ஆண்டு
''இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை அறிவியல்பூர்வமாக வெளியிட உள்ளோம். அதனை இந்தக் குழு அல்லது இந்தக் குழு அமைக்கும் துணைக் குழுக்களோ ஆய்வு செய்து, இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லப்படும் 2070-ஆம் ஆண்டுக்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடைய இலக்கு நிர்ணயம் செய்யும்.''

சூழலியல் நீதி
'' ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் சிறந்த கருத்தியல் அறிஞர்களாக அறியப்பட்டவர்கள், 'அரசை எப்படி காப்பாற்றுவது, நாட்டை எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில், தமிழ் நிலப்பரப்பில் பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதலைப் பற்றி வள்ளுவர் பேசியிருக்கிறார். உலகுக்கு வழிகாட்டிய அவர் அடியொற்றி, தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்து, அதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்றும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். ''












Click it and Unblock the Notifications