நெல்மணிகளை சேமிக்க மேற்கூரையுடன் 106 நவீன கிடங்குகள்! திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
இயற்கைப் பேரிடர் மற்றும் மழையிலிருந்து நெல்மணிகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க நவீன கிடங்குகள்.
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இதன்மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருள்களைப் பாதுகாப்பாக அந்தந்த வட்டத்திற்குள்ளேயே சேமித்து வைத்துக் காலதாமதமின்றி வழங்கிட முடியும்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அனைவருக்கும் உணவு
அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்கும் வகையில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் அரசின் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

நேரடி நெல் கொள்முதல்
விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியான நெல்மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றினை இயற்கைப் பேரிடர் மற்றும் மழைப் பொழிவுகளிலிருந்து பாதுகாப்பாக சேமித்து வைத்திட பத்து மாவட்டங்களின் பதினெட்டு இடங்களில் 2,86,350 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் ரூ.238.07 கோடி மதிப்பீட்டில் நிறுவ ஆணையிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு
அவற்றில் பணி முடிக்கப்பட்ட, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1,42,450 மெ.டன் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

யார் யார் பங்கேற்பு
இதன்மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருள்களைப் பாதுகாப்பாக அந்தந்த வட்டத்திற்குள்ளேயே சேமித்து வைத்துக் காலதாமதமின்றி நகர்வு செய்திட இயலும். இதனிடையே இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications