தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டம்! மதுரையில் அல்ல, ராமநாதபுரம் செலக்ட்!
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் எனக் கூறப்படும் நிலையில், தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்துகிறார் ஸ்டாலின்.
இது தொடர்பான புதிய தகவலை திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அநேகமாக ஆகஸ்ட் 17 அல்லது 18ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரத்திலிருந்து அண்ணாமலை நாளை பாதயாத்திரை தொடங்கும் நிலையில் திமுகவும் ராமநாதபுரத்தை மையமாக வைத்து தென் மாவட்டங்களுக்கான நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. இதனிடையே இது குறித்து ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது;
''மதவாத பா.ஜ.க. ஆட்சி நீடித்தால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து இருக்கிறது என்பதை திருச்சியில் நடந்த கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.
இந்தியாவைக் காத்திட இந்தியா (I.N.D.I.A) உருவாகியிருக்கிறது. இது உண்மையான - ஒன்றுபட்ட இந்தியா. நாடாளுமன்றத் தேர்தலில், பாசிச சக்திகளை வீழ்த்தி, மகத்தான வெற்றி காணப் போகிற இந்தியா. இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கக்கூடிய இந்தியா. இவற்றை மனதில்கொண்டு இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெற இணைந்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இந்தியா முழுமையான வெற்றி பெற, தலைவர் கலைஞரை நெஞ்சில் ஏந்தும் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஓயாது உழைத்திட வேண்டும். அதற்குரிய முதற்கட்டப் பயிற்சி காவிரி டெல்டா மண்டலத்தில் நிறைவேறியுள்ளது.
கழகப் படை வீரர்களாக உடன்பிறப்புகள் அணிவகுத்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, தென் மாவட்டங்களுக்கான பயிற்சிக் களம், இராமநாதபுரத்தில் அமையவிருக்கிறது. ''












Click it and Unblock the Notifications