திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு ஸ்டாலின் தயங்குகிறார்.... சொல்கிறார் தமிழிசை
சென்னை: திருவாரூர் இடைத் தேர்தலை கண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தயங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: வருகிற 27 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்று காலைதான் கிடைத்தது.
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பு நாளை உயர்மட்ட குழு கூடி முடிவெடுக்கப்பட உள்ளது. தற்போது தமிழக பாஜகவின் கவனம் எல்லாம், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் அதிகமாக இருக்கிறது என்றார்.
மேலும், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாய பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற ஸ்டாலினின் ட்வீட் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், இடைத் தேர்தலை கண்டு ஸ்டாலின் தயங்குவதாகவும், திருவாரூர் இடைத்தேர்தலை முதலில் எதிர்பார்க்க வேண்டிய கட்சி திமுக-வாகத் தான் இருந்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
தமிழகத்தில் கூட்டணி உடன் தான் பாஜக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்றும் தமிழிசை சௌந்தர ராஜன் கூறினார்.