“லிஸ்ட்” ரெடி.. உதயநிதி பதவியேற்பு மட்டுமில்ல! ஸ்டாலினின் அடுத்த ஆக்ஷன் - அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க இருக்கும் நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியல் தயாரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகராக, தயாரிப்பாளராக செயல்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அரசியலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்த தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் 2019 மக்களவைத் தேர்தல், 22 தொகுதி இடைத்தேர்தல்களில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார்.
அதேபோல், அப்போதைய மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்களிலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு 2019 ஆம் ஆண்டு இளைஞரணி செயலாளர் பதவியை வழங்கியது திமுக.

உதயநிதியின் அரசியல்
அதன் தொடர்ச்சியாக 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுகவை வெற்றிபெற செய்வதற்காக, கிராம சபை கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் என தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளுக்கெல்லாம் சென்று திமுகவுக்காக வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின். எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை கையில் எடுத்து செங்கல்லோடு அவர் பேசியது மக்களால் பெரிதும் கவரப்பட்டன.

எம்.எல்.ஏ. உதயநிதி
அந்த தேர்தலில் திருவல்லிக்கேணி - சேப்பாகம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வெற்றியை பெற்றார். 2021 தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது பதவியேற்ற மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினும் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது.

அமைச்சராக ஆதரவு
ஆனால், அவர் பார்வையாளர் அரங்கில் அமர்ந்து பதவியேற்பு விழாவை பார்த்து ரசித்தார். அதன் பின்னர் தொடர்ந்து திமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால், மு.க.ஸ்டாலின் அதற்கு அப்போது சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

ஆளுநர் மாளிகை அறிவிப்பு
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சராக போகிறார் என்ற தகவல் வேகமாக பரவி வந்தது. அமைச்சர்களும் இதனை உறுதிபடுத்தினர். இந்த நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் தகவல் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் உறுதியானது.

நாளை பதவியேற்பு விழா
அந்த செய்திக்குறிப்பில், "திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டு அமைச்சராக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்து உள்ளார். இதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். வரும் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறும்." என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

என்ன துறை?
நாளை அமைச்சராக பதவியேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படும் இலாக்கள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. குறிப்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அவரிடம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் ஆலோசனை
இந்த நிலையில்தான், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இன்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தெந்த அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது என்பது பற்றி ஆலோசித்து பட்டியல் தயாரித்து உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் சில முக்கிய உத்தரவுகளை அவர் பிறப்பித்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏன் மாற்றம்?
உதயநிதி அமைச்சராகப்போகும் துறை சார்ந்த அதிகாரிகளை மாற்றுவது மற்றும் அதற்கு புதிய அதிகாரிகளை நியமிப்பதற்காகவே இந்த ஆலோசனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு பட்டியல் தயாரித்து இருக்கலாம் என்று பேசப்படுகிறது. அனைத்திற்குமான விடை நாளை கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications