இன்னும் வெறும் 10 மணி நேரம் தான்.. ஓய்வே இல்லாமல் ஓடும் ஸ்டாலின்.. வேட்பாளர்களுடன் வீடியோ கால்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வருகை தந்தார். வாக்குப் பதிவு நாளான நாளை ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்க உரையாற்றியதுடன், அனைவரின் கருத்தையும், தொகுதி நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர். தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291. அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும். இதில் 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி, சசிகலா - ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சி களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. நாளை (23 ஆம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்க 1 மணி நேரத்திற்கு முன்னதாக மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும்.
75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கை உறுதி செய்யும் 'விவிபாட்' எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரங்கள் அனைத்தும் இன்று காலை முதல் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி பணியில் 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இன்று இரவு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார் முதல்வர் ஸ்டாலின். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
திமுக வேட்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் வாக்குப் பதிவு நாளான நாளை ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்க உரையாற்றியதுடன், வாக்குப் பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், தேர்தல் விதிகள், வேட்பாளர்கள் உரிமை, வாக்குச் சாவடி முகவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.
அனைவரின் கருத்தையும், தொகுதி நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையிலும், ஓய்வின்றி முதல்வர் ஸ்டாலின் வீடியோ காலில் பங்கேற்றது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications