MK Stalin: விஜய் ஆட்சி அமைக்கட்டும்! தவெக ஆட்சிக்கு திமுக இடையூறு செய்யாது! ஸ்டாலின் உறுதி
சென்னை: விஜய் ஆட்சிக்கு அடுத்த 6 மாதங்களுக்கு திமுக எந்த வித இடையூறையும் வழங்க மாட்டோம் என திமுக தலைவரும் காபந்து முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசின் சில திட்டங்களை விஜய் ஆட்சி தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அவர்கள் ஆட்சியமைக்கத் தி.மு.க. முட்டுக்கட்டை போடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி, அதிக இடங்களைப் பிடித்த விஜய்யின் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோருவதில் எந்தத் தவறும் இல்லை. அவர்கள் ஆட்சியமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம்.
விஜய் தலைமையிலான புதிய அரசு அமையட்டும். அவர்கள் மக்களுக்குச் செய்துள்ள வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனிப்போம். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.
முக்கியமாக, புதிய அரசு நிலை பெறுவதற்கும், அவர்கள் தங்களது நிர்வாகத்தைத் தொடங்குவதற்கும் போதிய அவகாசம் வழங்க நாங்கள் விரும்புகிறோம். எனவே, அடுத்த 6 மாதங்களுக்கு த.வெ.க. அரசுக்குத் தி.மு.க. தரப்பிலிருந்து எந்தவித இடையூறும் அல்லது அச்சுறுத்தலும் இருக்காது. 6 மாதங்களுக்குப் பிறகு அரசின் செயல்பாடுகளைப் பொறுத்து எங்களது அடுத்தகட்ட முடிவுகளை எடுப்போம்," என்று ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியலமைப்பு நெருக்கடி கொடுப்பதையோ அல்லது உடனடி தேர்தலை விரும்பாத திமுக, தனது அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களையும், த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளையும் புதிய அரசு தொடர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை சிற்றுண்டி திட்டம், மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும் என்பதே தனது முன்னுரிமை என அவர் கூறினார்.
விஜய் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்தது குறித்து, அது சாத்தியமில்லை என்று குறிப்பிட்ட ஸ்டாலின், "நாங்கள் செய்ததுபோல் குறைந்தபட்சம் ரூ.1,000 ஆவது வழங்குங்கள்" என்று யோசனை தெரிவித்தார்.
திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையின் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் கூறினார். நீட் ரத்து போன்ற சிலவற்றை மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக செயல்படுத்த முடியவில்லை எனவும் விளக்கினார்.
"இந்த தேர்தலிலும், எங்களால் நிறைவேற்ற முடிந்தவற்றை மட்டுமே வாக்குறுதிகளாக அளித்தோம். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போன்ற த.வெ.க.வின் வாக்குறுதிகளை அவர்களால் செயல்படுத்த முடியுமென்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் செய்தால் மகிழ்ச்சி," என்றார் ஸ்டாலின். புதன்கிழமை காலை முதல் அவரது இல்லத்தில் கூட்டணி கட்சியினரும், திரை பிரபலங்களும் கூடி அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாத போதிலும், தி.மு.க-வின் இந்தத் திடீர் 'மென்மையான' அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. ஆட்சியமைக்கத் தி.மு.க. மறைமுகமாக வழிவிடுகிறதா அல்லது இது ஒரு தற்காலிக அரசியல் நகர்வா என்ற விவாதம் தற்போது மேலெழுந்துள்ளது.
ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, இழுபறியில் இருந்த தமிழக அரசியல் சூழலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விஜய் முதல்வர் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. அதேசமயம், அ.தி.மு.க. தரப்பில் இந்த நகர்வுகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications