"நான் அழுது புலம்புபவனும் அல்ல.. காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல".. மோடிக்கு ஸ்டாலின் பதிலடி!
சென்னை: "நான் அழுது புலம்புபவனும் அல்ல.. யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல" என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியுள்ளார். "எவ்வளவு நிதி கொடுத்தாலும் சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள்" என ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், அவரது பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
"நாங்கள் நிதி கேட்பது அழுகை அல்ல, தமிழ்நாட்டு மக்களின் உரிமை. நான் அழுது புலம்புபவனும் அல்ல.. யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல. "மத்திய அரசிடம் கை ஏந்தி நிற்க, மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா?" என குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நீங்கள் பேசியதை உங்களுக்கே நினைவு படுத்துகிறேன்" எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழகத்துக்கு அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், எவ்வளவு கொடுத்தாலும் இங்கே இருப்பவர்கள் அழுகிறார்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
நாங்கள் கேட்பது அழுகை அல்ல, நான் மிகுந்த அடக்கத்துடன் பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது ஒன்றைத்தான். கையேந்தி நிற்க மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என்ன? என்று நீங்கள் சொன்னதை நினைவுபடுத்துகிறேன். மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநில அரசுகள் என்ன பிச்சைக்காரர்களா என்று முதல்வராக இருந்தபோது மோடி கேட்டார். பிரதமரான உடனேயே மாநிலங்கள் நிதி கேட்டால் அழுவதாக மோடி விமர்சிக்கிறார். மாநிலங்கள் அழுவதாக மோடி கூறுவது எந்த வகையில் நியாயம்?
ஆளுநர் மூலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்றார். ஆனால், இப்போது மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? நீங்கள் கேட்டதையே, இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறேன் என்பதா? நான் கேட்பது அழுவது அல்ல, தமிழ்நாட்டின் உரிமை.
நான் அழுது புலம்புபவனும் அல்ல, ஊர்ந்து சென்று பதவி கேட்பவனும் அல்ல. உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம். தமிழ்நாட்டில் 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். டெல்லியின் ஆளுமைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது" எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், "தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதி கொடுத்திருக்கிறோம் என பட்டியலிட முடியுமா? இந்தியை திணிக்க மாட்டோம், நீட் விலக்கு தருவோம் என்று உறுதி அளிக்க முடியுமா?" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராமேஸ்வரம் பாம்பனில் புதிய ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருகை தந்தார். பாம்பனில் புதிய ரயில்வே மேம்பாலத்தை மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை விட கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு இது மிகவும் உதவியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கிற்கு அதிகமாக பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்தபிறகும் கூட சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டுமே முடியும். அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்." என்று பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications