ஸ்டாலின் அடுத்த அஸ்திரம்.. துரைமுருகன் காதுக்கு போன விஷயம்.. டூ இன் ஒன் சான்ஸால் விக்கித்த வேலூர்
சென்னை: தமிழக அரசியலின் மூத்த முன்னோடியும் திமுகவின் பொதுச்செயலாளருமான அமைச்சர் துரைமுருகனைச் சுற்றி, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தர்மசங்கடமான அரசியல் சூழல் உருவெடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு தலைவருக்கு, அவரது சொந்தக் கட்சியினரே ஏற்படுத்திய உட்கட்சிச் சூழ்ச்சிகளும், தேர்தல் கள நிலவரங்களும் பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அசைக்க முடியாத ஆளுமையாகவும், திமுகவின் தூண்களில் ஒருவராகவும் விளங்குபவர் பொதுச்செயலாளர் துரைமுருகன்.

ஆனால் நடந்து முடிந்த இந்த தேர்தல் களம் அவருக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒருவித மன அழுத்தத்தையும், எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, காட்பாடி தொகுதியின் தேர்தல் நிலவரம் மற்றும் கட்சிக்குள் அவருக்கு எதிராக பின்னப்பட்டுள்ள வலைகள் துரைமுருகனை நிலைகுலையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
துரைமுருகன் காதுக்கு போன ஷாக்
இந்த முறை தேர்தலில் துரைமுருகன் போட்டியிடுவதை கட்சித் தலைமை விரும்பவில்லை என்பதே கவலையின் தொடக்கப்புள்ளியாகும். வயது மூப்பு மற்றும் சமீபகாலமாகவே அவர் எதிர்கொண்டு வரும் உடல் நலப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, அவர் ஓய்வு எடுக்கட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருதியதாகத் தெரிகிறது. இந்த விருப்பம் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மூலமாகவே அவரிடம் கொண்டு செல்லப்பட்டது.
தமக்கு சீட் மறுக்கப்படலாம் என்ற தகவலைக் கேட்டதுமே கடும் அதிர்ச்சியடைந்த துரைமுருகன், ஸ்டாலினிடம் நேரில் சென்று உருக்கமாகப் பேசி, தனது நீண்ட கால விசுவாசத்தை முன்வைத்து மீண்டும் போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றார்.
ஸ்டாலின் அடுத்த அஸ்திரம்?
இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், கடந்த 4 நாட்களாக காட்பாடி தொகுதி நிலவரங்களை துரைமுருகன் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறாராம்..
அதிலும் பூத் வாரியாக எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன, திமுகவின் பலமான கோட்டைகளாகக் கருதப்படும் பிளாக்குகளில் வாக்குப்பதிவு சதவீதம் எப்படி இருக்கிறது, அவை முழுமையாகத் தமக்கு விழுந்திருக்குமா என ஒவ்வொன்றையும் அவர் அலசி ஆராய்ந்துள்ளார். ஆனால், அவரிடம் வந்த தகவல்கள் அனைத்தும் கவலையை அதிகரிப்பதாகவே அமைந்துள்ளனவாம்.
காட்பாடி தொகுதியில் துரைமுருகனைத் தோற்கடிக்க திமுகவிற்குள்ளேயே சில எதிரிகள் ரகசியச் சூழ்ச்சிகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாம்.. கட்சிக்குள்ளேயே இருக்கும் சில முக்கிய புள்ளிகள், வாக்குகளைச் சிதறடிக்க திரைமறைவு வேலைகளை செய்துள்ளதாகவும், அந்த சூழ்ச்சிகளின் காரணமாக வெற்றி வாய்ப்பு ஊசலாடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயமெல்லாம் மகன் கதிர் ஆனந்த் மூலமாகவே துரைமுருகனுக்கு சென்றுள்ளது. சொந்தக் கட்சியினரே தமக்கு எதிராகச் செயல்பட்டதை அறிந்து துரைமுருகன் மிகுந்த மனவேதனையில் ஆழ்ந்துள்ளாராம்.
அமைச்சர் பதவியா? பொதுச்செயலாளர் பதவியா?
இந்த சூழலில், இன்னொரு இக்கட்டான செய்தியும் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும், அடுத்த அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.
அதாவது, அமைச்சர் பதவியா? அல்லது கட்சியின் பொதுச்செயலாளர் பதவியா? என்ற கேள்வியை ஸ்டாலின் தரப்பு அவரிடம் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாம். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டுமே துரைமுருகன் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை அமைச்சர் பதவியை விரும்பினால், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அவர் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
விக்கித்து போன துரைமுருகன்
தன்னுடைய அரசியல் வாழ்வின் அங்கீகாரமாகப் பார்க்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதை எண்ணி துரைமுருகன் விக்கித்து போயிருக்கிறாராம்.
ஒருபுறம் தொகுதிக்குள் நடந்த துரோகங்கள், மறுபுறம் அதிகாரப் பகிர்வு குறித்த தலைமையின் நிபந்தனைகள் என இரட்டைச் சவால்களைச் சந்தித்து வரும் துரைமுருகனின் அரசியல் எதிர்காலம் இப்போது ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது. காட்பாடியின் முடிவுகளும், ஸ்டாலினின் அடுத்தகட்ட நகர்வுகளுமே இந்தப் பழம்பெரும் தலைவரின் அரசியல் அந்தஸ்தைத் தீர்மானிக்கப் போகின்றன... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
- எழில்












Click it and Unblock the Notifications