திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மண் செழித்துள்ளது.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு.. விவசாயிகளுக்கு கோரிக்கை
சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருவதால் தண்ணீர் பிரச்சினை இல்லை என்றும் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதால் உழவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் பலரும் தவித்து வரும் சூழலில் முதல்வரின் இந்தப் பேச்சு விவாதத்தை எழுப்பியுள்ளது. இதனிடையே சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

''மண்ணும் செழித்துள்ளது. மக்களும் செழித்துள்ளார்கள். பாசனப் பரப்பு அதிகமாகி உள்ளது. உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது. தண்ணீர் பிரச்சினை இல்லை. வேளாண் பணியாளர்கள் கிடைக்கிறார்கள். இவை அனைத்தையும் உழவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
துல்லியமான வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திப் பயிர் பாசன முறையைக் கண்காணித்தல், ஆளில்லா விமானங்களை பயன்படுத்துதல் ஆகியவை எல்லாம் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் போது, உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால், வேளாண்மை என்பது வர்த்தகத் தொழிலாக மாறும்.
2006-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ஒரே கையெழுத்தில், 7000 கோடி ரூபாய் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்தார் நம்முடைய கலைஞர்.
வேளாண் அறிவு என்பது உழவர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் பெற்றாக வேண்டும். ''












Click it and Unblock the Notifications