எந்த வாக்கு பெட்டியை திறந்தாலும் உதயசூரியன்தான் உதிக்கணும்.. தொண்டர்களுக்கு ஸ்டாலின் அன்பு கட்டளை
சென்னை: எந்த வாக்குப் பெட்டியை திறந்தாலும் உதயசூரியன்தான் உதிக்க வேண்டும் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அன்பு கட்டளையிட்டுள்ளார்.
திமுக பிரச்சார பயணம் குறித்து அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
Recommended Video

அப்போது அவர் கூறுகையில், மிக முக்கியமான காலக்கட்டத்தில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் இருப்பவர்களிடம்தான் 234 தொகுதிகளும் இருக்கிறது. அண்ணா, கருணாநிதி ஆகிய இரு பலங்கள் இருக்கின்றன.

பணப்பலம்
மத்தியில் தாதாக்கள் ஆட்சி நடைபெறுகிறது. மாநிலத்தில் பணப்பலம் கொண்ட ஆட்சி நடைபெறுகிறது. இருமுனை தாக்குதல் இல்லை, தற்போது நம் மீதான தவறான பிரசாரத்தால் மும்முனை தாக்குதல் இருக்கிறது. தேவையில்லாமல் சிலரை கட்சி தொடங்க கட்டாயப்படுத்துகிறார்கள்.

மாறுபாடுகள்
உண்மையான வீரனுக்கு கிளியின் கழுத்துதான் தெரிய வேண்டுமே தவிர கிளியோ, மரமோ தெரிய தேவையில்லை. திமுக வச்சக் குறி தப்பாது என நிரூபிப்போம். இந்த தேர்தல் தமிழகத்தை வாழ வைப்பதற்கான தேர்தல் ஆகும். நமக்குள் இருக்கும் மாறுபாடுகள், வேறுபாடுகளை தூக்கி எறியுங்கள்.

உள்கட்சி பூசல்
திமுகவை திமுகவினரால்தான் தூக்கி எறிய முடியும் என அண்ணா சொன்னார். அண்ணா சொன்னதற்கு காரணம் திமுகவில் உள்ள உட்கட்சி பகைதான். அனைத்து தொண்டர்களின் உழைப்புக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். எல்லோரும் எல்லோருக்காகவும் உழைக்க வேண்டும்.

துரோகம்
சொந்த கட்சிக்கு துரோகம் செய்யக் கூடாது, ஆளும் கட்சிக்கு அனுசரணையாக நடக்கக் கூடாது. 10 ஆண்டுகளாக தொகுதி பக்கமே அதிமுகவினர் செல்லவில்லை. அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை அதிமுக அரசு சந்தி சிரிக்க வைத்துவிட்டது.

உதயசூரியன்
எந்த வாக்குப் பெட்டியை திறந்தாலும் அதில் உதயசூரியன் உதிக்க வேண்டும். 200 சட்டசபை தேர்தல் வெற்றியே நமது இலக்கு. இது தமிழகத்தை வாழ வைப்பதற்கான தேர்தல் என்பதை மறந்துவிடக் கூடாது. 200 தொகுதிகளில் ஒரு தொகுதி அல்ல, ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது. நம்மால் முடியும், நம்மால் மட்டுமே முடியும், மிஷன் 200 இதுதான் என ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு அன்பு கட்டளை வைத்தார்.












Click it and Unblock the Notifications