நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை ஓயமாட்டோம் -உறங்கமாட்டோம்! சூளுரைத்த ஸ்டாலின்! அடுத்து என்ன?
சென்னை: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது, உறங்காது என முதலமைச்சர் ஸ்டாலின் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி திமுகவினர் உண்ணாவிரதம் நடத்தி வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல மண விழாவில் கலந்துகொண்டு பேசிய போது இதனைக் கூறினார். மேலும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

''இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்புகளாக இருக்கும் இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவர் அணி இந்த மூன்று அணிகளும் சேர்ந்து தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே இந்த அறப்போராட்டம் தொடரும் . நீட் விலக்கு பெறுகிற வரையில் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது - உறங்காது என்ற அந்த உறுதியை எடுத்துச் சொல்லி, அதே உணர்வோடு உங்களுடைய உணர்வும் இருக்கும் என்று கருதி, உங்களை எல்லாம் விரும்பி வேண்டி கேட்டுக் கொண்டு, இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பணியாற்றும் இயக்கம்.
தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை வாக்குறுதிகளை எடுத்துச் சொல்லி இருக்கிறோமா, அந்த உறுதிமொழிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திராவிட மாடலாக இந்த அரசு பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த திராவிட மாடல அரசிற்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
எப்படி 2021-இல் திமுக ஆட்சியை உருவாக்கி தமிழ்நாட்டில் ஒரு நல்ல நிலையை - ஒரு விடியலை ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்களோ, அதே போல் 2024 நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியாவிற்கு ஒரு விடியலை நீங்கள் பெற்றுத் தர வேண்டும்.''












Click it and Unblock the Notifications