குடும்பத்தினரின் கவனக்குறைவே.. சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட காரணம்.. முதல்வர் வேதனை!
சென்னை: குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை போன்ற காரணங்கள் தான் சிறார்களை குற்றச் செயல்களில் ஈடுபட வைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் வேதனைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பெற்றோரும் சிந்தித்து பார்க்கும் வகையில் சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
பிள்ளைகள் மீது பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி ஒழுக்கமானவர்களாக வளர்க்க வேண்டும் என்பதை தான் முதல்வர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
மாணவ, மாணவிகளை நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாற்றிக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

சிறார் குற்றச்செயல்
சிறுவர்களை இளமைக் காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்க சிற்பித் திட்டம் பயன்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிறார் குற்றச் செயல்களில் ஈடுபட, குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய குடும்ப வருமானம் இல்லாமை,
ஆதரவில்லாமல் சிறார்கள் வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவை பெரும்பாலும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

சமூகப் பிரச்சனைகள்
இவற்றைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாக, சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.வளர்ச்சி என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும் இன்று ஒரு பக்கத்திலே சில சமூகப் பிரச்சனைகள் அதிகமாகி வருவதை நாம் கவனித்தாக வேண்டும், அதைத் தடுத்தாக வேண்டும்.

நற் பண்புகள்
போதைப் பொருள் ஒழிப்பு,குடிப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச் செய்தல், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்துதல், சுய ஆளுமைத் திறனை மேம்படுத்துதல், பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல்
பொதுமக்களோடு தொடர்பு ஆகிய பண்புகளை சிறார்களிடையே உருவாக்கியாக வேண்டும்.

மாணவர்கள் எதிர்காலம்
இப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக தலைசிறந்து விளங்குவார்கள். அதாவது சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும். இதுகுறித்து காவல்துறையின் உயரதிகாரிகளிடம் நான் சில தகவல்களைக் கேட்டேன். இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டேன்.

2,764 மாணவர்கள்
இந்தச் செயல் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவியர்கள் அப்பள்ளியில் உள்ள இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள்.

ஊட்டச்சத்துமிக்க உணவுகள்
மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகளைக் காவல்துறை அதிகாரிகளும் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் நடத்துவார்கள். இதுதொடர்பாக மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகம் ஓன்று வழங்கப்படும்.இந்த வகுப்புகள் நடைபெறும் தருணங்களில் மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications