பிறந்த ஊருக்கு புகழைச் சேரு! ''எனது கிராமம்''.. முதலமைச்சர் தொடங்கி வைக்கும் சூப்பர் திட்டம்!
சென்னை: பிறந்த ஊருக்கு புகழைச் சேர்க்கும் வண்ணம் 'எனது கிராமம்' என்னும் முன்னோடித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். இது குறித்த விவரம் வருமாறு;
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறை மூன்றாம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்துகிறது. நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், கல்வியாளர்கள், கவிஞர்கள் பங்கேற்கின்றனர்.

அயல்நாடுகளில் வாழும் 1400-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்பதற்குப் பதிவுகள் செய்துள்ளனர். இதில், 218 சர்வதேசச் தமிழ் சங்கங்கள் 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள், இந்த இரண்டு நாள் நிகழ்விலும் பங்கேற்கிறார்கள்.
முதல் நாளான ஜனவரி 11 அன்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றுகிறார்.
அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைக்கிறார். மேலும், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டுச் சிறப்பு நேர்வாக அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளாக நான்கு கலந்துரையாடல்களும் ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. முதல் அமர்வாக அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தமிழின் தொன்மை - தொடர்ச்சி குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில், சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை - தொலைநோக்குச் சிந்தனையும் செயலும் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும். பின்பு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமையில் அயலகத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செயல்படுத்தும் திட்டங்களான அயலகத் தமிழர்களுக்கு அளிக்கப்படும் அடையாள அட்டை, காப்பீடு வசதி, திருமண உதவித் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் குறித்த விவரங்களும், சிறப்புக் கலந்துரையாடலும் நடைபெறும்.
அடுத்தடுத்த நிகழ்வுகளாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் ஒளிரும் எதிர்காலம் - வாய்ப்புகளும் சவால்களும் என்ற தலைப்பிலும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் வணிகத்தில் தமிழர்கள் - வாய்ப்பும் வளர்ச்சியும் என்ற தலைப்பிலும் கலந்துரையாடல்கள் நடைபெறும்.
முதல்வர் ஸ்டாலின் இரண்டாம் நாளான ஜனவரி 12ம் தேதி விழாப்பேருரை நிகழ்த்துவதுடன் 'எனது கிராமம்' என்னும் முன்னோடித் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாகச் செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் அயலகத் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்குகிறார்.
முதல் நாளின் தொடர்ச்சியாக இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெறும். ஐந்தாவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு குறித்த அமர்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அயலகத்தில் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல் குறித்த விவாத அமர்வு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறுகிறது.
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இரண்டு நாள்களிலும் நாட்டுப்புற இயல், இசை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் குறிப்பாக தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் அவர்களின் நடன நிகழ்ச்சியும் அரங்கேற உள்ளன.












Click it and Unblock the Notifications