தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு.. வந்தாச்சு அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்!
சென்னை: தமிழகத்தில் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவலை அடுத்து கல்லூரிகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதையடுத்து அவ்வப்போது கல்லூரிகளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டன.
எனினும் கொரோனாவின் 2ஆவது அலை காரணமாக அவை மீண்டும் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்கள் வகுப்புகளை கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவின் 2ஆவது அலை ஓய்ந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அறிவித்துள்ளது.

அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்
தமிழகத்தில் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு அவற்றை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் கட்டாயம் இரு தவணை தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். அது போல் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளி விட்டு அமர வேண்டும். தடுப்பூசி போடாத ஊழியர்கள், ஆசிரியர்களை பள்ளிகளுக்குள் நுழைய விடக் கூடாது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு அன்றாடம் உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும். ஒரு வேளை யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிகளுக்குள் அனுமதிக் கூடாது என்பன உள்ளிட்ட பல வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இதையொட்டி பள்ளிகளை சுத்தப்படுத்துவது குறித்தும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 1
அந்த வகையில் கல்லூரிகளும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. இதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள், போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மாணவர்கள்
ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர். தடுப்பூசி போட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை தயார் நிலையில் கல்லூரிகள் வைத்திருக்க வேண்டும்.

கல்லூரிகளில் இணைய வழி
கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளை தொடருவது குறித்து ஆலோசிக்கப்படும். தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட வேண்டும். நோய்த் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

யாரும் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை
மாற்றுத் திறனாளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. கல்லூரியில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக், டயர்கள், உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அது போல் விஷ ஜந்துக்கள் உள்ளே புகாத வண்ணம் அடைப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்லூரியை சுத்தப்படுத்த வேண்டும் என அந்த வழிகாட்டும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications