அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் ஓய்வூதியம் - சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன தகவல்
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு இன்று வரை சட்டசபை கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் என்பது நடந்தது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார். தமிழக மக்களுக்காக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன்பிறகு எம்எல்ஏ எழிலரசன் சார்பில் தமிழக சட்டசபையில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து கூறியதாவது: புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS or Unified Pension Scheme) அவர்கள் (மத்திய அரசு) அறிவித்து இருக்கிறார்கள். இந்த புதிய ஓய்வூதிய திட்டமானது அரசு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாக கொண்டு இருக்கும் திட்டம். இந்த திட்டத்தின் செயலாக்கத்துக்கு உரிய வழிக்காட்டுதல்கள், விரிவான செயல்முறைகளை இன்னும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை.
மிக விரைவில் அந்த வழிக்காட்டுதல்கள், செயல்முறைகள் வழிகாட்டப்படும் என்று நம்புகிறோம். அது வெளியான உடனேயே நம்முடைய மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதல்வருடன் கலந்து ஆலோசித்து புதிய குழு அமைக்கப்படும். அந்த குழுவின் வழிக்காட்டுதல்படி நம்முடைய மாநிலத்தில் அந்த ஓய்வூதிய திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த நம் அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது 2 வகையான பென்ஷன் (ஓய்வூதியம்) திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில் ஒன்று பழைய ஓய்வூதிய திட்டம். இன்னொன்று புதிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டங்கள் என்பது மாநிலங்களுக்கு மாநிலம் வித்தியாசப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை புதிய ஓய்வூதிய திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அரசு ஊழியர்களை பொறுத்தவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் அதற்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பார்த்தால் இந்த திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் என்பது ஊழியர்களுக்கு கிடைக்கும். அதாவது 25 ஆண்டு ஒருவர் பணியாற்றி ஓய்வு பெறுவார் என்று வைத்து கொண்டால் அவரது கடைசி 12 மாத சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் இருந்து 50 சதவீதம் வரை ஓய்வூதியம் வழங்குவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
அதேபோல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து 10ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்க உறுதியளிக்கிறது. அடுத்ததாக இந்த திட்டம் குடும்ப ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. அதாவது அரசு ஊழியர் இறக்கும் பட்சத்தில் அவரது அடிப்படை சம்பளத்தில் 60 சதவீத அடிப்படையில் ஓய்வூதிய பலனாக வழங்கப்படும். அதோடு இறக்கும் ஊழியரின் குடும்பத்துக்கு உடனடியாக வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் என 3 வகைகளிலும் Inflation Indexation அடிப்படையிலான பலன் என்பது வழங்கப்படும்.
கிராசூட்டி (Gratutity). அதாவது பணி ஓய்வு பெற்ற தேதியில் இருந்து ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஊதியம் + அகவிலைப்படி 1/10 என்ற அளவில் இருக்கும். இந்த அளவு என்பது இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன்தார்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications