Sterlite Case: சுப்ரீம் கோர்ட்டில் முடிவிற்கு வந்தது ஸ்டெர்லைட் வழக்கு.. விரைவில் தீர்ப்பு!
ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துள்ள நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
சென்னை: ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துள்ள நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
ஸ்டெர்லைட் வழக்கு ஒரு வழியாக முடிவிற்கு வந்து இருக்கிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலி ஆனவர்களுக்கான நீதி கிடைக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
கடுமையான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது.
தீர்ப்பும் எதிர்ப்பும்
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. கடந்த ஒரு மாதமாக இதன் மீதான விசாரணை நடந்தது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
மொத்தமாக முடிந்தது
இந்த வழக்கில் தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று இருக்கிறது. ஸ்டெர்லைட் வாதம், தமிழக அரசு தரப்பு வாதம் ஸ்டெர்லைட்டிற்கு எதிரான இன்னொரு மனுதாரரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தரப்பு வாதம் ஆகியவை முடிந்து இருக்கிறது.
வைகோ வாதம்
இந்த வழக்கில் வைகோ தரப்பு வாதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக இவர் வாதாடியதே ஸ்டெர்லைட் இப்போது இயங்காமல் இருக்க மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட்டிற்கு எதிராக தமிழக அரசை விட இவர்தான் கடுமையான வாதங்களை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு
இந்த நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய கோரி உள்ளது. திங்கள் கிழமை இந்த வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் கோரிக்கை வைத்துள்ளது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் மார்ச் மாத தொடக்கத்தில் இதில் தீர்ப்பளிக்கப்படலாம்.