“விசில் அடிக்கலனா உதைப்பேன்”.. தூய்மைப் பணியாளரை மிரட்டிய தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு.. ஷாக்!
சென்னை: தூய்மை பணியாளரை உதைப்பேன் என மிரட்டி விசில் அடிக்க வைத்ததாக தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு பகிரங்கமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு தேர்தல் சின்னமாக விசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தவெக நிர்வாகி இவ்வாறு பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களம் காண உள்ளது. இதனிடையே, அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் விசில் சின்னத்தை ஒதுக்கியது. இதையடுத்து, தவெக பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரத்திலும் அக்கட்சியினர் விசில் அடித்து ஒலி எழுப்பி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் சட்டசபை தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதில் கலந்து கொண்டு பேசிய தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு, “விசில் சின்னத்தை பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள். தூய்மை பணியாளர்களை விசிலடிக்க வேண்டாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. விசில் அடிக்காவிட்டால் ய்ன்னை உதைப்பேன் என கூறியதும் தூய்மை பணியாளர் விசில் அடித்துவிட்டார்” எனக் கூறினார்.
சமீபத்தில் சிவகங்கை பகுதியில் திமுக கவுன்சிலர் அயுப்கான், தன் வார்டில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் விசில் அடிக்கக் கூடாது என்றும், அதற்கு மாறாக அரசு கொடுத்துள்ள தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்த வேண்டிய பாடல் ஒலிக்கும் ஒலிபெருக்கியையும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, தமிழகம் முழுவதுமே தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று விசில் ஒலி எழுப்புவது வாடிக்கை அந்த சத்தத்தை கேட்டதும், வீட்டில் உள்ளவர்கள் குப்பையை எடுத்து வந்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுப்பார்கள். தற்போது தூய்மை பணியாளர்கள் யாரும் விசில் அடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தவெக கட்சி கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி புரசை வி.எஸ். பாபு, “என் பகுதியில் தூய்மைப் பணியாளரிடம் உதைப்பேன் என மிரட்டி விசில் அடிக்க வைத்தேன்” எனப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "தூய்மை பணியாளர்கள் போன்ற அடித்தட்டு தொழிலாளர்களை மிரட்டியதாக பகிரங்கமாக சொல்வதா" என கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications