சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சோதனை.. ஜன்னல் கண்ணாடிகளை மாற்ற மட்டும் இத்தனை லட்சம் செலவா?
சென்னை: சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயிலில் கடந்த 6 மாதத்தில் மட்டும் கல் வீச்சு சம்பவங்களால் இதுவரை 64 ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்து இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளை கொண்டதாக உள்ளது.

சொகுசான இருக்கைகள், விசாலமான ஜன்னல் கண்ணாடிகள், அதிவேக பயணம் என பயணிகளை கவரும் வகையில் பல வசதிகள் உள்ளன. இதனால் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 17 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை - மைசூரு வழித்தடத்திலும், சென்னை - கோவை இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரு ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. கட்டணம் சற்று அதிகமாக இருப்பதாக பயணிகள் மத்தியில் ஒரு ஆதங்கம் இருந்தாலும் ரயில்கள் முழுவதும் இருக்கைகள் நிரம்பியபடியே செல்கின்றன.

வந்தே பாரத் ரயில்கள் அடிக்கடி மாடுகள் குறுக்கே வந்து விபத்துக்குள்ளாவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பெரும் சோதனையாக இருப்பது கல் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாவது. வந்தே பாரத் ரயில்கள் இயக்க தொடங்கியது முதல் பல வழித்தடங்களிலும் ரயில் ஜன்னல் கண்ணாடிகளை நோக்கி கல் வீசி தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
சென்னை- மைசூரு வந்தே பாரத் ரயிலும் இந்த கல் வீச்சுக்கு தப்ப வில்லை. நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயிலாக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைத்தாலும் கல் வீச்சில் இருந்து இந்த வந்தே பாரத் ரயிலும் தப்பவில்லை.
கடந்த 6 மாதத்தில் மட்டும் கல் வீச்சு சம்பவங்களால் வந்தே பாரத் ரயிலின் 64 ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளதாம். இதை சீர் செய்வதற்காக ரயில்வே செய்த செலவு மட்டும் ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒவ்வொரு ஜன்னல் கண்ணாடியின் விலை ரூ.12 ஆயிரம் மற்றும் கூடுதல் செலவாக ரூ.8 ஆயிரம் (லேபர் சார்ஜ்) ஆகிறதாம்.

கல் வீசி ரயிலை தாக்குபவர்கள் பெரும்பாலும் 10 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றே ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. கல் வீசி தாக்குதல் நடத்துவதற்கான பின்னணி காரணம் பெரிதாக தெரியவில்லை என்றாலும் பெரிய ஜன்னல் கண்ணாடிகள் இருப்பதால் அவற்றை குறிவைத்து சிறுவர்கள் கற்களை வீசுவதாகவும் ரயில்வே போலீசார் சொல்கிறார்கள்.
தற்போது ரோந்து பணிகள் அதிகரிப்பு மற்றும் பள்ளிகளில் கவுன்சிலிங் போன்றவை கொடுக்கப்படுவதால் கல் வீசும் சம்பவங்கள் கணிசமாக குறைந்து இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications