கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
சென்னை: கோயம்புத்தூர் சிறுமி பலி விவகாரத்தை திமுக உடன் தொடர்புபடுத்தி தவெக அரசு பொய் பிரச்சாரம் செய்கிறது என்று ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த விவகாரம் குறித்து திமுகவை தொடர்புபடுத்தி விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும், ஆதாரமில்லாத இந்த அவதூறுக்கு எதிராக திமுக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்று செய்தியார்களை சந்தித்த அவர், "தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 3 வாரங்களில், 40க்கும் மேற்பட்ட கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. இதையெல்லாம் திசை திருப்ப சோஷியல் மீடியாக்கள் பயன்படுத்தப்படுகிறது.
இன்ஸ்டா போன்ற சோஷியல் மீடியா வழியில் ஆட்சிக்கு வந்தார்கள்.. மீண்டும் அதே பாணியில் பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். கோவை சிறுமி சம்பவத்தை திசை திருப்ப சோஷியல் மீடியாக்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதையெல்லாம் திமுக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.
சோஷியல் மீடியாவுக்கு அடிமையான மக்கள்தான் வாக்களித்தார்கள். குழந்தைகளை வைத்து தாய் தந்தையை வலியுறுத்தி ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். திமுகவுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் பேட்டியளித்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சட்டரீதியாக திமுகை இதை தொடர்ந்து அணுகும்.
தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மக்கள். எங்கள் மக்களுக்கு எதிராக எங்களை திருப்ப முடியாது. அவதூறு பரப்பினால், 2 ஆண்டுகள்தானே தண்டனை என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் போலி ஐடி மூலம் அவதூறு பரப்பினால் ஆயுள் தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
கோவையில் நடந்தது என்ன?
வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென காணாமல் போயிருக்கிறார். இது குறித்து பெற்றோர் உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், அடுத்த நாள் சிறுமியின் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள குளத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications