இந்தி திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்குகள்- உலக டிரெண்டிங்கில் டாப்.. #StopHindiImposition
Recommended Video
சென்னை: இந்தி மொழி திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் சர்வதேச டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளன.
வரும் கல்வியாண்டு முதல் இந்தி பேசாத மாநிலங்களில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்கிறது கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரை. இதை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை, நேற்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து இணையத்தில் இந்த குழுவின் அறிக்கைகள் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.

கட்டாய இந்தி
இக்குழுவானது மும்மொழிக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட இந்தி பேசாத மாநில மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க நேரிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்தி எதிர்ப்பு டிரெண்டிங்
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியை எதிர்த்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ட்விட்டரில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அதில் இந்தி திணிப்புக்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இது சர்வதேச அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

தலைவர்கள் கண்டனம்
மேலும் #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. அத்துடன் இந்தி திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் நாடு விடுதலை அடைவதற்கு முன்பே 1938-ல் மொழிப்போர் களம் கண்டது தமிழகம்தான்.

முதல் இந்தி எதிர்ப்பு போர்
அப்போதும் இந்தி திணிப்பு எதிராக மிகப் பெரிய கிளர்ச்சி நடைபெற்றது. அந்த போராட்டத்தில் தாளமுத்து, நடராசன் எனும் போராளிகள் மரணித்தனர். அந்தப் போராட்டத்தில்தான் தந்தை பெரியார், ‘தமிழ்நாடு தமிழருக்கே' என முழக்கமிட்டார்.

2,3-வது இந்தி எதிர்ப்பு போர்
அதைத் தொடர்ந்து 1948-ல் மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் 1965-ம் ஆண்டு உச்சகட்ட மொழிப்போர் நடைபெற்றது. அதில் தமிழர்கள் தீக்குளித்தும் விஷமருந்தியும் மாண்டு போயினர். துப்பாக்கிச் சூட்டில் அண்ணாமலை ராசேந்திரன் என்கிற மாணவர் உயிரிழந்தார்.

காங்கிரஸின் இறுதி அத்தியாயம்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இறுதி அத்தியாத்தை எழுதி திராவிட அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வித்திட்டது இந்த போராட்டம்தான். தற்போதும் அத்தகைய சூழ்நிலையை நோக்கி தமிழகம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கின்றனர் தமிழார்வலர்கள்.

தமிழகத்தில் கொந்தளிப்பு
அதுவும் மத்தியில் பாஜக ஆட்சி அமையக் கூடாது என தற்போதுதான் லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இந்த நிலையில் மத்தியில் பதவி ஏற்ற உடனேயே இந்தி திணிப்பை பாஜக அரசு கையில் எடுத்திருப்பது தமிழகத்தை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது. இத்தகைய முயற்சியை மத்திய அரசு கைவிடாவிட்டால் நித்தம் நித்தம் போராட்டம் என நடக்கும் தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராகவும் கிளர்ச்சி வெடிப்பதை தடுக்க முடியாது என்பதும் தமிழார்வலர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications