தெருநாய்கள் அச்சுறுத்தல்.. தலைமை ஆசிரியர்களுக்குப் பறந்த உத்தரவு.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி
சென்னை: கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தமிழகத்தில் தெருநாய்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், ரேபிஸ் தொற்றால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தெருநாய்கள் அச்சுறுத்தலில் இருந்து பள்ளி மாணவா்களைப் பாதுகாக்கும் வகையில், பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தெருநாய்க்கடி பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவ்வாறு தெருநாய்க் கடியால் பாதிக்கப்படுவோர் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதில்லை. இதனால், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

தடுப்பூசி முக்கியம்
இந்நிலையில், தெருநாய் அச்சுறுத்தலில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து தலைமையாசிரியா்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, வீடுகளில் வளா்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோா் ஆசிரியா் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும்.
பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரு நாய் அச்சுறுத்தல் சாா்ந்த விழிப்புணா்வுப் பதாகைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். தெரு நாய் அச்சுறுத்தல் சாா்ந்து விழிப்புணா்வை காலை வணக்கக்கூட்டத்தில் மாணவா்களுக்கு வழங்க வேண்டும். தெரு நாய்க்கடிக்கு ஒரு மாணவா் உட்பட்டிருப்பின் அதை எவ்வித தயக்ககமுமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க உரிய அறிவுரைகளை மாணவா்களுக்கு வழங்க வேண்டும்.
நாய்களுக்கு உணவளிக்க கூடாது
பள்ளியைச் சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாக சாா்ந்த உள்ளாட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவா்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதோ, உணவளிப்பதோ தவிா்க்கப்பட தேவையான அறிவுரைகளை வழங்குதல் வேண்டும். ரேபிஸ் நோய்தொற்று குறித்த விழிப்புணா்வை மாணவா்களுக்கு வழங்குதல் வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியா்கள் ஒரு ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்து, வளாகத்தின் பராமரிப்பு, தெருநாய்கள் வளாகத்துக்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பாா்வையிட வேண்டும். அதிகாரியின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் அனைவரும் அறியும் வகையில் இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications