போராட்ட களமாக தமிழகம்.. பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்.. போலீஸ் குவிப்பு
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. டெல்லியில் தொடங்கிய மாணவர்கள் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் நடந்து வருகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்து வந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக நேற்று இரவோடு இரவாக போலீசார் அனைவரையும் கைது செய்து அழைத்துச்சென்றனர், முன்னதாக போராட்டம் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது

மதுரையில் போராட்டம்
இந்நிலையில் குடியுரிமை சட்டதிருத்ததுக்கு எதிராக மதுரையில் வக்ஃபு வாரிய கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். வக்ஃபு வாரிய கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.இந்த சூழ்நிலையில் அந்த கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடியில்
இதேபோல் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் முழக்கமிட்டனர்

கடலூரில் போராட்டம்
கடலூரில் கந்தசாமி மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஜாமியா மில்லியா பல்கலை கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய ஏராளமான மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம்
புதுவை மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் டெல்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

குடியுரிமை சட்டம்
கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் முன்பாக திரண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டம்
சென்னையில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலரும் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போராட்டம் நடக்கும் கல்லூரிகளில் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications