தமிழகத்தில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டம்! போலீஸாருடன் தள்ளுமுள்ளு!
சென்னை: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வு 4,750 மையங்களில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். 13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை மறுத்த தேசிய தேர்வு முகமை எந்த ஒரு வினாத்தாள் கசிவையும் சமூக ஊடக பதிவுகள் எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் கணக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான விடை என்றால் 4 மதிப்பெண்களும் தவறான பதிலுக்கு 4 மதிப்பெண்கள்+ 1 மதிப்பெண் என 5 மதிப்பெண்கள் மைனஸ் செய்யப்படும்.
இப்படி பார்த்தால் அனைத்து கேள்விகளுக்கு சரியாக விடையளித்தவர்களுக்கு 720 மதிப்பெண்கள் கிடைக்கும். அது போல் ஒரே ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்திருந்தால் 5 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டு 715 மதிப்பெண்கள்தான் கிடைத்திருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு சில மாணவர்கள் 719, 718 என மதிப்பெண்களை பெற்றதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை, "தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் நேரம் வீணானால், அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது" என்று தெரிவித்தது. ஆனால், யார் யார் விண்ணப்பித்தனர், எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக மீண்டும் தேர்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் போராட்டம் நடத்திய மாணவர்களை அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications