அமெரிக்காவில் படிக்க ஆசையா?.. சந்தேகங்களை தீர்க்கும் "அமெரிக்காவில் கல்வி" கண்காட்சி.. அரிய வாய்ப்பு
சென்னை: "அமெரிக்காவில் கல்வி: அமெரிக்க பல்கலைக் கழகங்களுடன் மெய்நிகர் கண்காட்சி 2021" என்ற கண்காட்சி மூலமாக இந்திய மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே, நூற்றுக்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பல்கலைக் கழக சேர்க்கை வழிமுறைகள், பல்கலைக் கழக வளாக வாழ்க்கை, மாணவர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் கோவிட் தொற்றுக் கால அமெரிக்க பல்கலைக் கழக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் என பல்வேறு தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.
இந்தக் கண்காட்சியில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள, இளங்கலை. முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை அளிக்கும் ஏராளமான பல்கலைக்கழங்கள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்க பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை.

அமெரிக்காவில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான "அமெரிக்காவில் கல்வி: அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பட்டதாரிகளுக்கான மெய்நிகர் கண்காட்சி" ஆகஸ்ட் 27, வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 5.30 முதல் 10.30 வரை நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவு செய்யலாம்: https://bit.ly/EdUSAFair21EmbWeb
பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் உயர்நிலை பள்ளி மாணவர்கள் "அமெரிக்காவில் கல்வி: அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கான மெய்நிகர் கண்காட்சி" செப்டம்பர் 3, வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 5.30 முதல் 10.30 வரை நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவு செய்யலாம்: https://bit.ly/UGEdUSAFair21EmbWeb
இது குறித்து சென்னை அமெரிக்கத் துணை தூதர் ஜுடித் ரேவின், "கடுமையான உழைப்பு, திறமை மற்றும் வகுப்பறைகளில் அவர்களின் கலாசார மற்றும் அறிவுபூர்வமான பங்களிப்பு காரணமாக இந்திய மாணவர்களை அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பெரிதும் மதிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள 4,500க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் ஒவ்வொரு துறையிலும், மிக அதிகமான எண்ணிக்கையில் படிப்புகளை அளிக்கின்றன. இந்திய மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, இலவச மெய்நிகர் கல்விக் கண்காட்சியில் பங்கேற்று பயன் அடைய அழைக்கிறேன். நீங்கள் நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேரிடையாக உரையாட முடியும் மேலும், இந்திய மாணவர்கள் உயர்கல்விக்கு ஏன் அமெரிக்காவைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்" என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க-இந்திய கல்வி அமைப்பின் செயல் இயக்குனரான ஆடம் குரோட்ஸ்கி, "உலகம் முழுவதும் ஓர் அசாதாரண நிலை நிலவும் இந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவுக்கான இந்த மெய்நிகர் கல்விக் கண்காட்சி, மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி குறித்த தகவல்களை அறிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திய மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் அமெரிக்காவில் கல்வி என்ற தங்கள் கனவு மெய்ப்பட அழைக்கிறோம்" என்று கூறினார்.
"அமெரிக்காவில் கல்வி" பற்றி
"அமெரிக்காவில் கல்வி" என்பது அமெரிக்காவில் உயர் கல்வி குறித்த அமெரிக்க அரசின் அதிகார பூர்வமான அங்கம் ஆகும். இது, 425க்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் ஆலோசனை மையங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர் ஆக உள்ளது. இது, சமூக ஊடகங்கள் மற்றும் மெய்நிகர் நிகழ்வுகள் மூலமாக கல்விக் கண்காட்சிகள், பள்ளி, பல்கலைக் கழங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை நடத்தி, அமெரிக்காவில் உயர்கல்வி குறித்த சரியான தகவல்களை வழங்கி வருகிறது.
அமெரிக்க-இந்திய கல்வி அமைப்பு, இந்தோ-அமெரிக்க கல்வி சங்கம், அகமதாபாத், யாஷ்னா அறக்கட்டளை, பெங்களூரு, ஒய் ஆக்ஸிஸ் பவுண்டேஷன், ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, புது டெல்லி ஆகிய நகரங்களில் எட்டு "அமெரிக்காவில் கல்வி" மையங்களை நடத்தி வருகின்றன.
மேலும் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்: மாயா சுந்தர்ராஜன், பிராந்திய அலுவலர், அமெரிக்க-இந்திய கல்வி அமைப்பு. கைப்பேசி: 9840267202. மின்னஞ்சல்: [email protected].












Click it and Unblock the Notifications