பழைய பிணம்தான் புதிய வண்டுகள் வரும்- தமிழ்நாடு சர்ச்சை-ஆளுநர் ரவி மீது சு.வெங்கடேசன் எம்பி அட்டாக்!
சென்னை: தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதற்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பழைய பிணம் என்றாலும் புதிய வண்டுகள் வெளிவரத்தானே செய்யும் என ஆளுநர் ரவிக்கு சு.வெங்கடேசன் எம்பி சாடி இருக்கிறார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி திராவிட கொள்கைகளை பகிரங்கமாக விமர்சித்து அரசியல் பேசினார். திராவிட கட்சிகளால் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர்; இந்தியா முழுவதற்குமான செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது. தமிழகத்தில் தனி அரசியல் இருக்கிறது. தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்கின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என சொல்வதே பொருத்தமானது என ஆளுநர் ரவி பேசியிருந்தார்.

ஆளுநர் ரவியின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளுநர் ரவியின் இந்த விமர்சனத்தை கண்டித்து திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் அவரது மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது என்றால், திராவிட ஆட்சி குறித்த அவரது விமர்சனம் பா.ஜ.க.வின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தர பிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது - தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது கூட அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது? தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக திரு. இரவி அவர்கள் பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன என கூறியிருந்தார்.

இதேபோல் பலரும் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது. தமிழ்நாடு பெயர் மாற்றம் எப்படி நிகழ்ந்தது? தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான உயிர் தியாகங்கள், தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிடர் இயக்க தலைவர்கள் ஆற்றிய உரைகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

சிபிஎம் கட்சி எம்பியான சு.வெங்கடேசனும் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தமது சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, தியாகி சங்கரலிங்கனார், அறிஞர் அண்ணா. தோழர் பூபேஷ்குப்தா என்று எங்களின் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்தை இன்று மீண்டும் ஆளுநர் ரவி தூக்கிக்கொண்டு வருகிறார். பழைய பிணம் என்றாலும் புதிய வண்டுகள் வெளிவரத்தானே செய்யும் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications