சிந்துவெளி நடனமங்கையை சரஸ்வதி நாகரிக துவாரபாலகர் என சொல்வதா? மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
சென்னை: சிந்துசமவெளியில் கண்டெடுக்கப்பட்ட நடன மங்கை சிலையை இல்லாத சரஸ்வதி நாகரிகத்து துவாரபாலகர் என உலக அருங்காட்சி தினத்தில் மோசடி செய்த மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி அண்மையில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை தொடங்கிவைத்தார். மத்திய செயலகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைய உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் மெய்நிகர் பயணத்தையும் அவர் தொடங்கிவைத்தார். தொழில்நுட்ப மேளா, பாதுகாப்பு ஆய்வகம் ஆகியவற்றையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கிவைத்தார். அருங்காட்சியகங்கள், நிலைத்தன்மை நலம் என்ற இந்தாண்டின் கருப்பொருளுடனான 47-வது சர்வதேச அருங்காட்சியகத் தினத்தைக் கொண்டாட, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியின் சின்னத்தில் சென்னாப்பட்டினத்தின் கலையை சித்தரிக்கும் வகையில் மரத்தினால் வடிவமைக்கப்பட்ட நடனமாடும் சிறுமி உருவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் ஒரு புதிய கலாச்சார உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலம், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவின் பாரம்பரியத்துடன் உள்ளூர் மற்றும் கிராமப்புற அருங்காட்சியகங்களை பாதுகாக்கும் சிறப்பு பிரச்சாரத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்ட புத்த பகவானின் புனிதமான நினைவுச் சின்னங்கள் தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைத்து புத்த பகவானின் பக்தர்களை ஒன்றுபடுத்தியுள்ளது. நமது பாரம்பரியம் உலக ஒற்றுமையின் முன்னோடியாக மாறக்கூடும். வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை, பொருட்களை பாதுகாக்கும் உணர்வு சமுதாயத்தில் உருவாக்குவோம் என்றார்.

இதனிடையே இந்த அருங்காட்சியகத்தை முன்வைத்து சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக இடதுசாரி எம்பி சு.வெங்கடேசன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 5000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் அதிசிறந்த கலைவடிவமான சிந்துவெளி நடனமங்கையை "துவாரபாலகர்" என பெயர் சூட்டி, "சிந்து சரஸ்வதி நாகரிகம்" என வரலாற்றை திரித்து. கருப்பு வண்ணத்தை வெண்மையாக மாற்றி உலக அருங்காட்சி தினத்தில் வரலாற்று, பண்பாட்டு மோசடியில் ஈடுபட்ட மோடி அரசுக்கு கண்டனங்கள். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications