சென்னையில் கார் மோதி எஸ்.ஐ. உயிரிழப்பு... பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை..!
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதியதில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் பிரசன்னா. தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளராக வண்டலூரில் பணியாற்றி வரும் இவர், நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அதி வேகத்தில் வந்த எஸ்.யூ.வி. ரக கார் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னா மீது மோதியது. அதில் நிலைகுலைந்து போன அவர், படுகாயங்களுடன் துடிதுடித்துள்ளார். இதையடுத்து போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் பிரச்சன்னாவை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் துரதிர்ஷடவசமாக சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்திய கார் உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் வடபழனியில் உள்ள தனது இல்லத்திலிருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கார் மோதி உயிரிழந்த விவகாரம் சென்னை காவல்துறையினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. இதனிடையே இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த டெக்னிக்கல் எஸ்.ஐ. பிரசன்னாவுக்கு 25 வயது மட்டுமே ஆகிறது. மிக இள வயதில் தனது திறமையை கொண்டு காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், தனக்குள் எத்தனை ஆசைகளை கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை.
காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னாவின் உடற்கூராய்வு முடிந்து அவரது சொந்த ஊரான கோலியனுருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எத்தனையோ வம்பு வழக்குகளில் தலையிட வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு அதில் தலையிடும் பட்சத்தில் அவர்களுக்கான எதிரிகளும் அதிகரிக்கத் தொடங்குவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications