Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்ற அரசியல் பணிகளை விட சமூக பணிகளிலே ஆர்வம்: 'ராஜ்யசபா' சீட் குறித்து சுப.வீ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக சார்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோரை ராஜ்யசபா எம்.பி.யாக்க வேண்டும் என்ற தமிழார்வலர்கள் கோரிக்கை குறித்து சுப.வீ விளக்கம் அளித்துள்ளார்.

திமுக சார்பாக ராஜ்யசபாவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். அவருடன் வேல்முருகன், சுப. வீ உள்ளிட்டோரையும் ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேன்டும் என்பது தமிழார்வலர்களின் கோரிக்கை.

Subavee clarifies on Rajya Sabha Seat row

ஏற்கனவே திமுக, விடுதலை சிறுத்தைகள் எம்.பி.க்கள் லோக்சபாவில் தமிழக நலனுக்கு உரத்து குரல் எழுப்பக் கூடியவர்கள். ஆகையால் வைகோவுடன் வேல்முருகன், சுப.வீ ஆகியோரையும் ராஜ்யசபாவுக்கு அனுப்பினால் தமிழகத்தின் குரல் வலிமைப்படும் என சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டா. இது தொடர்பான ஹேஷ்டேக்குகளும் ஷேர் செய்யப்பட்டன.

இந்நிலையில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் சுப.வீ. குறிப்பிட்டுள்ளதாவது:

அனைவருக்கும் வணக்கம்.

சில நாள்களுக்கு முன்பு, "ஒன் இந்தியா" வலைத் தளத்தில், வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில், திமுக சார்பில் எனக்கும் ஒரு இடம் கொடுக்கப்படலாம் என்பது போல ஒரு செய்தி வெளியாகியிருந்தது. என் மீது நல்லெண்ணம் கொண்டு அச்செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம். அதே போல், என் மீது கொண்ட அன்பு காரணமாக, அருமை நண்பர்கள் வன்னியரசு (விடுதலைச் சிறுத்தைகள்), வழக்கறிஞர் கரூர் ராசேந்திரன் ஆகியோரும், எனக்கு அப்பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்னும் தங்கள் விருப்பத்தைத் தங்கள் முகநூல்களில் பதிந்திருந்தனர்.

இவற்றைத் தொடர்ந்து நேரிலும், தொலைபேசி வழியாகவும், வலைத்தளங்களிலும், நண்பர்கள் பலர், வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர். என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

எனினும், என் மௌனம் சம்மதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக இச்சிறு விளக்கத்தைக் கூற வேண்டியவனாக உள்ளேன். இச்செய்தி வெறும் விருப்பத்தின் அடிப்படையிலானதேயன்றி, உண்மையானதாக இருக்க எந்த வாய்ப்புமில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அப்படியே இருந்தாலும், அதில் எனக்கு எவ்வித உடன்பாடுமில்லை. இவ்விரு செய்திகளையும் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை ஆகும். திமுகழகம் என்பது ஓரு பேரியக்கம்.

அக்கட்சிக்காக அடிநாள்தொட்டு உழைத்தவர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர். அவர்களுள் சிலரைத் தேர்ந்தெடுத்தே, கழகம் பதவி வழங்கும். அதுவே நியாயமானது. கட்சிக்கு உழைத்தவர்கள், என்னினும் ஆற்றல் மிக்கவர்கள் அங்கு பலர் இருக்க, எனக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்?

அது மட்டுமின்றி, எனக்கு அதில் விருப்பமும் இல்லை. இப்படி நான் சொல்வது, எதிலும் நான் ஆசையற்றவனாக, தொண்டில் மட்டுமே எண்ணம் கொண்டவனாக இருக்கிறேன் என்னும் பொருளில் இல்லை. எல்லா மனிதர்களையும் போல, இயற்கையான ஆசைகளைக் கொண்டவனே நானும்!

மேலும், தேர்தல், நாடாளுமன்ற முறைகளில் நானும், நான் சார்ந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் நம்பிக்கை கொண்டவர்களாகவே உள்ளோம். அதனால்தான்,தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுகின்றோம். இருப்பினும், எல்லோரும் ஒரே மாதிரியான முயற்சிகளில் ஈடுபடாமல், ஒவ்வொருவரும் தங்களின் இயல்புக்கேற்ப, வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு துறைகளில் பணியாற்ற வேண்டும் என்ற கருத்துடையவன் நான்.

என் எண்ணத்தில், நாடாளுமன்ற அரசியல் பணிகளை விடவும், சமூகப் பணிகளில் ஆர்வமும், சற்று அனுபவமும் உடையவன் நான். ஆகவே, அந்தத் தளத்திலேயே என் பணிகளைத் தொடர்வதும், சமூக நீதி, சாதி ஒழிப்பு போன்ற திராவிட இயக்கக கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதும் என் வாழ்நாள் பணி என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.

இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டவர்களே, எங்கள் பேரவையிலும் என்னோடு இணைந்து பணியாற்றிக் கொண்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரையில், சமூகப் பணிகளில், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளோடும், அரசியல் பணியில், திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் இணைந்து நின்று பணியாற்றவே விரும்புகிறோம். நாடாளுமன்ற அரசியலைத் திமு கழகம் மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது என உறுதியாக நம்புவதால், எங்கள் பணியில் சமூக நீதிப் பணிகளுக்கே முன்னுரிமை தர விரும்புகின்றோம்.

அரசியல் தளத்தில், திமுகவின் ஒவ்வொரு வெற்றியையும் எங்களின் வெற்றியாகவே கருதி மகிழ்கின்றோம். ஆதலால் நாங்கள் தனியே தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அனைவருக்கும் மீண்டும் என் அன்பும், நன்றியும்!

இவ்வாறு சுப. வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+