திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு.. பரபரப்பு அறிக்கை
சென்னை: திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. அது போல் அவர் திமுக முப்பெரும் விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.
இதனால் இவற்றை எல்லாம் சேர்த்து வைத்து சுப்புலட்சுமியின் பதவி பறிக்கப்பட்டதாகவே செய்திகள் உலா வந்தன. ஆனால் நேற்றைய தினம் தான் திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கிறேன் என்றே அவர் கூறியதாகவும் செய்திகள் வந்தன.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
இந்த நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், 2009 ஆம் ஆண்டு எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற முடிவை தலைவர் கருணாநிதி அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்.

கருணாநிதி மறைவு
தலைவர் கருணாநிதி மறைவுக்குப்பிறகு, அவர்களின் விருப்பத்தின்படி ஸ்டாலின் அவர்களை முதல்வராக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று அரசு பணிகளையும் கட்சி பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதியே கடிதம்
இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டேன் என இன்றைய தேதியிட்ட அறிக்கையில் சுப்புலட்சுமி கையெழுத்திட்டுள்ளார்.

அடுத்தது யார்
இதனால் அந்த பதவிக்கு அடுத்ததாக யாரை கொண்டு வரலாம் என்ற யோசனையில் திமுக இருக்கிறது. இது தொடர்பாக சுப்புலட்சுமி கடிதம் கொடுத்ததிலிருந்தே அடுத்தது யாரை நியமிக்கலாம் என தலைமை யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மற்றபடி திமுகவுக்கு எதிராக தனது பேஸ்புக் பக்கத்தில் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் பதிவிட்டதால் தர்மசங்கடத்தில் அவரே விலகிவிட்டார் என்றெல்லாம் கூறுவது தவறான தகவல் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications