நான் இணையும் அளவுக்கு அதிமுக, பாஜக தகுதியான கட்சிகளே இல்லை: சுப்புலட்சுமி ஜெகதீசன் சுளீர் பதில்
சென்னை: நான் இணையும் அளவுக்கு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தகுதியில்லை என சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் கடந்த 40 ஆண்டுகளாக இருந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு நெருக்கமானவர். இவர் திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.
திமுகவின் மூத்த முன்னோடியான இவர், அண்மையில் திமுகவிலிருந்து விலகினார். மேலும் அரசியலை விட்டே விலகுவதாகவும் அறிவித்தார். இது தொடர்பான அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டசபை தேர்தல்
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோற்க அமைச்சர் முத்துசாமி உள்ளடி வேலைகளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து அதுவும் கிடைக்காததால் திமுகவிலிருந்து சுப்புலட்சுமி விலகிவிட்டதாக பல்வேறு உறுதிப்படுத்தப்படாத கருத்துகள் வந்தன.

திமுகவிலிருந்து விலகல்
இந்த நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகியதற்கு காரணமே அவர் பாஜகவில் நல்லதொரு பதவியில் அமரத்தான் என்ற பேச்சு அடிப்பட்டது. இதையடுத்து அவர் அதிமுகவில் இணைவதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஒரு செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் அதிமுகவில் இணையவில்லை. திமுக 40 ஆண்டுகளாக இருந்துள்ளேன்.

பாஜக அதிமுக
அது போல் பாஜகவும் அதிமுகவும் நான் இணையும் அளவுக்கு அக்கட்சிகளுக்கு தகுதியே இல்லை. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டேன். இதன் பிறகு எப்படி வேறு ஒரு கட்சியில் சேர முடியும். பாஜக தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதன் உண்மையான முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டவே நான் திமுகவில் இருந்து விலகி பொதுவெளியில் சமூக அரசியலில் இறங்கியுள்ளேன்.

பாஜகவின் உண்மை முகம்
திமுகவில் இருந்து கொண்டு பாஜகவின் உண்மை முகத்தை தோலுரிக்க முடியாதா என கேட்கலாம். ஆனால் அப்படி பாஜகவுக்கு எதிரான எனது விமர்சனங்களால் திமுகவுக்கும்- மத்திய அரசுக்கும் இடையே சங்கடம் ஏற்படும். அதனால்தான் நான் அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்தேன். வேண்டுமென்றே நான் அதிமுக இணைகிறேன் என சிலர் என் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

15 டூ 20 நாட்கள்
நான் விவசாயிகள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். இதுகுறித்து நல்லதொரு அறிவிப்பை இன்னும் 15 அல்லது 20 நாட்களில் அறிவிப்பேன். எனவே எனக்கு மாற்றுக் கட்சியில் இணைய வேண்டும் என்ற எண்ணம் இம்மியளவும் கிடையாது. நான் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு என்னை திமுக மூத்த தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் நான் எனது முடிவில் உறுதியாக இருப்பதாக சொல்லிவிட்டேன் என்றார் சுப்புலட்சுமி.












Click it and Unblock the Notifications