ஆஹா.. நேரா "மோடி பெயரை" கிண்டல் பண்ற மாதிரி இருக்கே.. பரபரப்பை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
சென்னை: குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு, நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டதை மறைமுகமாக நக்கல் செய்துள்ளார் பாஜக சீனியர் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
அகமதாபாத்தை கர்நாவதி என்று மறுபெயரிட குஜராத் அரசு சட்ட அம்சங்களை ஆராய்ந்து வருவதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். "அகமதாபாத் பெயரை கர்நாவதி என்று மாற்றுவது குறித்து நாங்கள் சிந்தித்து வருகிறோம், இது பற்றிய பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன.
சட்ட மற்றும் பிற கோணங்களில் இருந்து பார்த்த பிறகு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என்று, குஜராத்தி புத்தாண்டு தினத்தையொட்டி காந்திநகரில் உள்ள பஞ்ச்தேவ் கோவிலில் பிரார்த்தனை செய்த பின்னர் ரூபானி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.யிடம் தெரிவித்திருந்தார்.
உ.பி.யில் இதுதான் வேலை
அலகாபாத் மற்றும் பைசாபாத் முறையே பிரயாகராஜ் மற்றும் அயோத்தி என மறுபெயரிட்டது உத்தரபிரதேச அரசு. அதே பாணியில், குஜராத் அரசும், சட்டரீதியான தடை இல்லாவிட்டால் அகமதாபாத்தை கர்நாவதி என்று பெயர் மாற்ற திட்டமிட்டுள்ளது.
சட்ட அம்சங்கள்
இந்த செய்தியை டுவிட்டரில் ஷேர் செய்திருந்த ஒரு பாஜக ஆதரவாளர், பாஜக சீனியர் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை டேக் செய்து, சட்ட அம்சங்களை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாமே என்று, இந்த தகவலை குறிப்பிட்டிருந்தார்.
|
சு.சாமி கிண்டல்
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி நக்கலாக பின்னூட்டம் செய்துள்ளார். அவர் கூறுகையில், "நீண்ட காலம் பார்க்க வேண்டாம். ஸ்டேடியம் விஷயத்தைப் போல பெயர்களை மாற்றுவதில் சட்ட சிக்கல்கள் இல்லை" என்று கூறியுள்ளார்.
நரேந்திர மோடி ஸ்டேடியம்
உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோடேரா மைதானம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, ஸ்டேடியம் திடீரென நரேந்திர மோடி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில்தான் இதை மறைமுமாக கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் சு.சாமி. ஏற்கனவே 89 வயது மெட்ரோ மேன் கேரள பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அத்வானி, எம்.எம். ஜோஷி மற்றும் சாந்தா குமார் ஆகியோர் 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சுப்பிரமணியசாமி தெரிவித்திருந்தார்.