ஐ.பி.எஸ். அண்ணாமலை பதவிக்கு வேட்டு? மாஜி ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாஜக தலைவர் பதவி கேட்கும் சு.சுவாமி?
சென்னை: தமிழக பாஜக இருக்கிறதா என்ற கேள்வி மூலம் தலைவர் அண்ணாமலையின் பதவிக்கு வேட்டு வைக்க துடிக்கும் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மாஜி ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவியை பெற்று தர துடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொந்த காசில் சூனியம் என்பார்கள். அது போல் சொந்த கட்சி குறித்தே படுமோசமாக விமர்சிப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. பாஜக எம்பியாக இருந்தாலும் பிரதமர் மோடி, அமைச்சர்கள் என ஒருவரையும் விமர்சனம் செய்யாமல் விட்டுவைக்க மாட்டார்.
அப்படிப்பட்ட சுப்பிரமணியன் சுவாமி ஜனதா கட்சித் தலைவராக இருந்தார். அக்கட்சியை கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜகவுடன் இணைத்துவிட்டார்.
பேரறிவாளன்
இந்த நிலையில் இவர் பேரறிவாளன் விடுதலை குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் பாஜக உள்ளதா, எங்கையாவது நாளிதழில் அறிக்கை பார்த்துள்ளேன்.
தமிழகத்தில் பாஜக இல்லை
அவ்வளவுதான். ஏதாவது செய்துள்ளார்களா? அதைதான் கேட்கிறேன். தமிழகத்தில் பாஜக இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. ஜனதா கட்சியில் இருப்பவர்கள் யாருக்கு இவர்கள் அழைப்பு கொடுக்காதவர்கள், தனியாக இருப்பவர்கள் அவர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு தலைமை பொறுப்பு கொடுத்தால் பாஜக மேலும் மேலும் தமிழகத்தில் வளர முடியும் என தெரிவித்துள்ளார்.
மாஜி ஐஏஎஸ் அதிகாரி
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து மறைமுகமாக அண்ணாமலையை விமர்சிப்பது போல் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, அவர் யாரை பாஜக தலைவராக வந்தால் தமிழகத்தில் அக்கட்சி வளரும் என சொல்கிறார் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில் சுப்பிரமணியன் சுவாமியுடன் ஜனதா கட்சியில் இருந்தவர் மாஜி ஐஏஎஸ் அதிகாரி.
யார் அந்த மாஜி ஐஏஎஸ் அதிகாரி
இவர் தற்போது பாஜகவில் இருக்கிறார். எனவே இவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும் என சொல்ல வருவதாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார்கள். அவர் யார் என்று சொல்லுங்கள் என கேட்டதற்கு அவர் முன்னாள் பெண் அதிகாரி, ஆசிட் வீச்சுக்குள்ளானவர், சீனியர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என பெயரை சொல்லாமல் க்ளூவை மட்டும் கொடுத்தனர்.