பயணிகள் கவனத்திற்கு.. சென்னையில் இன்றும் நாளையும் மின்சார ரயில்கள் நிறுத்தம்.. அலைமோதிய மக்கள்
சென்னை: சென்னையில் தாம்பரம் - கடற்கரை இடையேயான வழித்தடத்தில் இன்றும் நாளையும் மின்சார ரயில்கள் சுமார் 5 மணி நேரம் வரை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் ரயில்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பேருந்து, பைக்குகளில் சென்றால் டிராப்பிக்கில் சிக்கி கடும் அவஸ்தை பட வேண்டியிருக்கும். மெட்ரோ ரயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் அன்றாடம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், தொழில் நிமித்தமாக புறநகரில் இருந்து சென்னை சிட்டிக்குள் வருபவர்கள் என பல்வேறு தரப்பினரும் சென்னை புறநகர் ரயில்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்னை செண்ட்ரலில் இருந்தும் சென்னை கடற்கரையில் இருந்தும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னை தாம்பரம் - கடற்கரை இடையேயான வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை காண முடியும். சில நிமிடங்கள் ரயில்கள் தாமதம் ஆனாலும் பயணிகள் கூட்டம் பிளாட்பார்மில் அலைமோதும். அதிலும் பீக் நேரங்களில் சுமார் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதை காண முடியும். எப்போதும் பயணிகள் நிரம்பி வழியும் இந்த வழித்தடத்தில் இன்றும் நாளையும் ரயில்கள் குறிப்பிட்ட மணி நேரத்திற்கு நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் ரயில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் நிறுத்தப்பட்டதால் தாம்பரம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் நிறுத்தப்பட்டுள்ள விவரம் தெரியாமல் வந்த பயணிகள் பலரும் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினர். ரயில்வே நிர்வாகம் முறையாக முன்னறிவிப்பு இன்றி ரயில் சேவையை நிறுத்தியுள்ளதாக பயணிகள் பலரும் குற்றம் சாட்டினார்.
ரயில் நிலையம் வரை வந்து ரயில்கள் இயக்கப்படாத விவரம் அறிந்த பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை பயன்படுத்தி ஆட்டோக்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்ததையும் காண முடிந்தது. விடுமுறை நாள் என்றாலும் தனியார் அலுவலகங்கள் பலவும் இயங்கியதால், வேலைக்கு செல்ல வந்த பயணிகள் பலரும் பேருந்தை பிடித்து அலுவலகத்திற்கு தாமதமாகவும் சென்றதை காண முடிந்தது.
கோடம்பாக்கம், தாம்பரம் ரயில்வே நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 41 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் பயணிகள் சிறப்பு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்- சென்ன கடற்கரை, தாம்பரம் - சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் நாளை 41 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் நிறுத்தப்படுவதால் மாநகர பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications