சென்னை பறக்கும் ரயிலில் போறீங்களா..ஜூலை 1 முதல் ஜனவரி 31 வரை பீச் ஸ்டேசன் வரை ரத்து..காரணம் இதுதான்
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் வரை 4வது ரயில் பாதை அமைக்கப்பட இருப்பதால், 7 மாதங்களுக்கு கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டு முக்கியமான ரயில் நிலையங்களில் எனில் அது சென்டரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள்தான். இந்நிலையில், வெளி மாநிலங்களுக்கும், கோவை, திருப்பூர், சேலம், வேலூர் என மேற்கு மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கும் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகிறது.

அதேபோல தென் மாவட்டங்கள் முழுமைக்கும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் வரை உள்ள பாதைகள் மூன்று வழி பாதையாக மட்டுமே இருக்கிறது. எனவே தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் ரயில்கள் எழும்பூர் வரை தடையின்றி வந்துவிடுகிறது.
ஆனால், அங்கிருந்து கடற்கரை வருவதற்கு தாமதமாகிறது. இந்த வழித்தடத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அதேபோல எழும்பூரிலிருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும், சரக்கு ரயில்களும் இந்த மூன்று வழிப்பாதை காரணமாக தாமதமாக இயக்கப்படுகிறது.
எனவே இந்த பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.96.70 கோடி நிதியை ஒதுக்கியிருந்தது. தற்போது இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஜூலை 1ம் தேதி முதல், சென்னை கடற்கரையிலிருந்து, சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து பறக்கும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் நான்கு வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-குமிடிப்பூண்டி, கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் கடற்கரை-வேளச்சேரி. சென்னையில் பறக்கும் ரயில் சேவை 1997 ஆம் ஆண்டு முதன்முதலாக சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 266 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் பெரிய மைல்கல்லாக அப்போது பார்க்கப்பட்டது. பின்னர் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், பறக்கும் ரயில் சேவை வழித்தடங்களில் இருக்கும் ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையங்களின் தரத்திற்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, 3வது கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2008ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தில் ஆதம்பாக்கம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக பணிகளை தொடங்க முடியவில்லை. தற்போது, அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் இந்த பணிகள் நிறைவு பெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, நான்காவது வழித்தடமாக சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பறக்கும் ரயில் சேவையை வழங்க ரயில்வே வாரியம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக, அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்து இருந்தது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சேவை வழக்கம் போல் தொடரும் என கூறப்பட்டுள்ளது. கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்தான் அதிக அளவில் பயணிக்கின்றனர். எனவே முடிந்த அளவுக்கு குறிப்பிட்ட காலத்தில் இந்த வழித்தடத்தில் மீண்டும் பழையபடி ரயில்களை இயக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications