"ஹீரோ" ஸ்டாலின்.. அதே பாசம்.. அதே அன்பு.. தமிழகத்தையே நெகிழ வைத்த ஒற்றை போட்டோ.. சபாஷ் முதல்வர்
: மாணவனுக்கு காலை சிற்றுண்டியை ஊட்டிவிடும் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஷேர் ஆகி வருகிறது
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பள்ளி மாணவனுக்கு, காலை சிற்றுண்டியை ஊட்டிவிட்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டதை, தமிழக கல்வி புரட்சியில் வெடித்து கிளம்பிய முதல் விதை என்றே சொல்லாம்..!
அடுத்து, தமிழக முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்றார்.. பள்ளி நாட்களை தவிர மற்ற நாட்களில் மதிய உணவு வழங்கப்படாததை அறிந்த எம்ஜிஆர், அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு உடனடியாக மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரி வேங்கட சுப்ரமணிக்கு உத்தரவிட்டார்.
உப்புமா, கிச்சடி, பொங்கல்.. அரசு பள்ளிகளில் அசத்தலான காலை சிற்றுண்டி..எத்தனை வகைகள் தெரியுமா?
எம்ஜிஆர் + காமராஜர்
1982ம் ஆண்டு "சத்துணவு" என்ற சாகாவரம் பெற்ற திட்டம் ஆரம்பமானது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடி திட்டமாக இன்றும் திகழ்கிறது என்றால், எம்ஜிஆரின் கூர்மையான நோக்கமே இதற்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.. குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதன் மூலம் அவர்களின் உடல்நலத்தினை மேம்படுத்துவதுடன், கல்வி கற்பதையும் உறுதி செய்து, அதன் முலம் ஊட்டச் சத்து குறைபாட்டினை களைவதே முதன்மை நோக்கமாக கொண்டிருந்தார் எம்ஜிஆர்.. அதுமட்டுமல்ல, குழந்தைகள் கல்வி கற்றால் மட்டுமே, எதிர்காலத்தில் நாட்டை மதிப்புமிகு மனிதவளமாக மாற்ற முடியும் என்பதிலும் உடும்பு பிடியான கருத்தை கொண்டிருந்தார் எம்ஜிஆர்.
பிள்ளையார் சுழி
ஏழைகளின் கடவுள் என்று எம்ஜிஆர் அழைக்கப்படுவதற்கு காரணமே இந்த திட்டம்தான்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கும், பிள்ளையார் சுழி போட்டதும் இந்த திட்டம்தான்.. 2014ம் ஆண்டு சூடான "கலவை சாதமாக" மேலும் பட்டை தீட்டப்பட்டு அடுத்தக்கட்டத்துக்கு இட்டுச்சென்றதும் இந்த திட்டம்தான்.. உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மையாக இருப்பதற்கு, அசைக்க முடியாத தூணாக விளங்கி கொண்டிருப்பதும் இந்த திட்டம்தான்..
வாழைப்பழம்
சத்துணவு திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் 50 லட்சம் குழந்தைகள் பயனடைகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது... மதிய உணவு,சத்துணவு, கலவை சாதம், முட்டை, வாழைப்பழம், என்று ஒவ்வொரு கட்டமாக உருமாறி, இன்று "காலை சிற்றுண்டி திட்டம்" வரை இதன் வளர்ச்சி விரிவடைந்து பிரம்மாண்டமாக நம்முன் உயர்ந்து நிற்கிறது. சத்துணவு என்று சொன்னாலே, இடதுபுறம் ஒரு பள்ளி மாணவன், வலதுபுறம் மாணவியுடனும் சேர்ந்து உட்கார்ந்து எம்ஜிஆர் அன்று சாப்பிட்ட போட்டோ ஒன்று கண்முன் நிழலாடி செல்வதை நம்மால் தவிர்க்க முடியாது..
தம்பி சாப்பிடு
1982-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி என்ற இடத்தில்தான் முதல் சத்துணவு திட்டத்தை துவங்கி வைத்தார் எம்ஜிஆர்.. திடீரென அந்த கட்டிடத்தின் தரையில் உட்கார்ந்து, பள்ளிக்குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுவார் என்று அங்கிருந்தவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. 35 வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆருடன் சாப்பிட்ட அந்த 1-ம் வகுப்பு மாணவன் பற்றின தகவல் ஒன்று, சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.. அவர் இப்போது, ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறாராம். "தம்பி நல்லா சாப்பிடு, சாப்பாடு நன்றாக இருக்கிறதா? என்று கேட்டுக் கொண்டே எம்ஜிஆர் சாப்பிட்டாராம்.
ஹீரோ ஸ்டாலின்
எம்ஜிஆரின் இந்த செயல்பாடும், அக்கறையும் எந்த அளவுக்கு பேசப்பட்டு வருகிறதோ, அதே போன்ற அன்பான அணுகுமுறையைதான் இன்றைய முதல்வர் ஸ்டாலினும் கையில் எடுத்துள்ளார்.. பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடிக்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருக்கும் கிளாஸ்ரூமில் மாணவர்களுடன் பெஞ்சில் சேர்ந்து உட்காருவதும், பிள்ளைகளுடன் பேசுவதும் வழக்கம்தான் என்றாலும், மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் "காலை சிற்றுண்டி திட்டம்" என்ற வரலாற்று முத்திரையை சிறப்பாக பதித்துள்ளார் ஸ்டாலின்.
அன்பு + எளிமை
மாணவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டதுடன், அவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு, எம்ஜிஆரையே இந்த விஷயத்தில் ஒருபடி மிஞ்சிவிட்டார் என்றே சொல்லலாம்.. "சாப்பாடு நல்லா இருக்கா" என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் உள்ள மாணவனுக்கும், மாணவிக்கும் உணவு ஊட்டிவிடும் இந்த போட்டோதான் காலையில் இருந்து வைரலாகி கொண்டிருக்கிறது.. தந்தை போன்ற முதல்வர் + எளிய முதல்வர் + அன்பான முதல்வர் + சிறந்த முதல்வர் + சொன்னதை செய்து காட்டும் முதல்வர் என்பன போன்ற பல உயரிய மதிப்பீடுகளை இந்த போட்டோ தாங்கி வருகிறது.. அத்துடன், முன்னோடி திட்டமாக இந்திய மாநிலங்களுக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
பசிச்சுமை
பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகுதான் வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக கூறியதில் ஸ்டாலினின், தந்தைக்குரிய பாசம் வெளிப்படுகிறது.. எத்தகைய நிதிச்சுமை வந்தாலும் பசிசுமையை போக்குவதே இந்த அரசின் இலக்கு என்று உறுதியாக சொன்னதில், ஒரு முதல்வரின் சிறந்த மாண்பு வெளிப்படுகிறது.. அத்துடன், சத்துணவு என்ற திட்டத்தின் இன்னொரு மைல்கல்லை எட்டிப்பிடித்து, சத்தான விதையை தமிழக அரசியலில் விதைத்துள்ளார் கருணாநிதி மகன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...!