அப்பதான் அவைக்கு வந்தார் சபாநாயகர் செல்வம்.. நெஞ்சுவலியால் ஐசியூவில் அனுமதி.. நலம் விசாரித்த ஆளுநர்
புதுச்சேரி சபாநாயகருக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை: புதுச்சேரி சபாநாயகர் ஆர். செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் நலன் விசாரித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றது... ஜுன் 16-ம் தேதி சபாநாயகராக செல்வமும் 27ம் தேதி அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கியது.. அன்றைய தினம் மாலையில் புதுச்சேரி பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

கூட்டம்
4-ம் நாள் பேரவை கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இன்று 5வது நாள் கூட்டம்.. இதில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார்... ஆனால், பேரவைக்குள் வராமலேயே அவரது கார் வேகமாக வெளியேறியது.

நெஞ்சுவலி
எனவே, சட்டப்பேரவை நிகழ்வுகள் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் தொடங்கியது... பிறகுதான் தெரிந்தது, பேரவைக்கு வந்த உடனேயே சபாநாயகர் செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.. அதனால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. பிறகு அங்கே ஐசியூவில் அப்போதே அனுமதிக்கப்பட்டும் உள்ளார்.. தற்போது சபாநாயகருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

சிரமம்
பேரவையில் பங்கேற்க காலை வந்தபோதே செல்வத்துக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது.. அதற்கு பிறகுதான் அருகில் இருந்தோரிடம் நெஞ்சுவலிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.. இப்போது டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை கண்காணித்து வருகிறார்கள்.. அதேபோல, சட்டசபை காவலர்களும், மருத்துவமனை ஐசியூ பிரிவுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐசியூ
பேரவைக்கு வந்த உடனேயே நெஞ்சுவலி ஏற்பட்டதால், அந்த வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது... சபாநாயகர் செல்வம் ஐசியூவில் உள்ள சூழலில் யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை... சபாநாயகர் செல்வத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்... இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications