என்ன ரோடையே காணோம்.. வாகன ஓட்டிகளே கவனம்! சென்னையின் முக்கிய சாலையில் இன்று திடீர் பள்ளம்!
சென்னை: சென்னை வடபழனி - கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் அருகே சாலை நடுவே இன்று காலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. 10 அடி நீளத்தில் 3 முதல் 6 ஆடி ஆழத்திற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக போக்குவரத்து காவலர்கள் வந்தனர். பள்ளத்திற்கு முன்பாக தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர்.
சென்னையில் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் இதுபோன்று பள்ளங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 26 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பாதை ஆகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாலமாகவும் இந்த மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப் பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகியவை பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான் அப்பகுதியில் இன்று பள்ளம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications