அப்பாடா.. சென்னை விட்ட நிம்மதி பெருமூச்சு! சட்டென கொட்டி தீர்த்த மழை.. குளுகுளுவென மாறிய வானிலை
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று இரவு சென்னையில் பல்வேறு பகுதியில் திடீரென மழை பெய்திருக்கிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை பொறுத்த அளவில் பொதுவாக மார்ச் 10 தேதியில்தான் வெயில் கடுமையை காட்ட தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மார்ச் மாதம் முழுவதும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் என்கிற அளவுக்கு சுட்டெரித்தது. ஏப்ரல், மே மாதங்கள் சொல்லவே தேவையில்லை. போதும் போதும் என்கிற அளவுக்கு வெயில் கடுமை காட்டியது. சரி ஜூன் வந்த சரியாயிடும் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பின்னர் ஒரு வழியாக ஜூலை மாதம் இந்த வெயில் சற்று குறைந்து மழை மேகங்கள் மழையை கொட்ட தொடங்கின. தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் மழை பெய்து குளிர்வித்தது. இருப்பினும் கடந்த 4 நாட்களாக வெயில் 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெடித்திருக்கிறது. மதுரை, திருச்சி, நாகை உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது. சென்னையிலும் வெயில் தனது வேலையை காட்டியது. இன்று காலை முதல் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்துள்ளது.
சென்னையின் வில்லிவாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, அயனாவரம் புரசை போன்ற இடங்களில் திடீரென மழை பெய்திருக்கிறது. இதனால் ஓரளவுக்கு புழுக்கம் குறைந்திருக்கிறது. இந்த மழை குறித்து ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதாவது, "தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications