தமிழகத்தில் திடீரென எதிர்பாராத நிகழ்வுகள் வேகமாக நடக்கிறது.. காங்கிரஸ் கலக்கம்
சென்னை: தமிழகத்தில் பல விஷயங்கள் மிக வேகமாக மாறி வருகின்றன, எதிர்பாராத பல மாற்றங்கள் திடீரென நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகம் இப்போது பீகாரின் 'நிதிஷ் குமார் வெர்ஷன்' ஆக மாறிவிட்டது. பாஜக தமிழகத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. 'தாங்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை' என்று சொன்னவர்கள் இப்போது பாஜகவிடம் சரணடைந்துவிட்டார்கள். அதிமுக ஏற்கனவே பணிந்துவிட்டது, இப்போது திமுகவும் பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றுள்ளது. எனினும் மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களில் தவெக வெல்லாததால், தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. தவெக ஆட்சியமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களுடன் ஆதரவு கொடுத்த போதிலும் இன்னும் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. விசிக, இடதுசாரிகள் எடுக்கும் முடிவே ஆட்சியை தீர்மானிக்கும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை வேடிக்கை பார்த்த திமுக, அதிமுக திடீரென இணைந்து ஆட்சியமைக்க திட்டமிடுவதாக தகவல்கள் பரவி வருகிறது. இன்னும் இரண்டு நாளில் அடுத்தகட்டமாக நகர்வுகள் இருக்கும் என்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உளள்து.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "தமிழகத்தில் திடீரென எல்லாமே மிக வேகமாக மாறி வருகின்றன, எதிர்பாராத பல மாற்றங்கள் திடீரென நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகம் இப்போது பீகாரின் 'நிதிஷ் குமார் வெர்ஷன்' ஆக மாறிவிட்டது. பாஜக தமிழகத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. 'தாங்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை' என்று சொன்னவர்கள் இப்போது பாஜகவிடம் சரணடைந்துவிட்டார்கள். அதிமுக ஏற்கனவே பணிந்துவிட்டது, இப்போது திமுகவும் பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது."
"தமிழகத்தில் என்.டி.ஏ (NDA) என்று எதுவும் இல்லை, ஏனென்றால் பாஜகவிற்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ தான் இருக்கிறார். ஆனால், எந்த விலை கொடுத்தாவது, குறிப்பாக திரு. அமித் ஷா அவர்கள், திரு. விஜய் தமிழக முதலமைச்சராக ஆவதைத் தடுக்க நினைக்கிறார்."
விசிக மற்றும் இடதுசாரிகள் குறித்து அவர் கூறுகையில், "பாஜகவின் இந்தத் திட்டத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இடதுசாரிகள் மற்றும் விசிக நண்பர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், அதிமுக மற்றும் திமுக இடையே உருவாகும் இந்த உறவு, திரு. நரேந்திர மோடியின் ஆசியோடு நடக்கிறது என்பதை ஐயுஎம்எல் (IUML) கட்சியும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக மக்கள் ஏற்கனவே நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் திட்டங்களை நிராகரித்துவிட்டார்கள். திமுக மற்றும் அதிமுக இடையே அமையும் கூட்டணி தமிழகத்திற்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும்." என்றார்.













Click it and Unblock the Notifications