அலைக்கழிக்காதீங்க.. கலெக்டர் கண் முன்னே தீக்குளிக்க முயன்ற திருநங்கை!
சென்னை: ராமநாதபுர ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கண்முன்னே திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அப்படித்தான் நேற்று திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.
ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக ஏா்வாடியைச் சேர்ந்த திருநங்கைகள் நீலா, நயன்தாரா, சிவன்யா, சுசிலா உள்பட 10 திருநங்கைகள் வந்திருந்தனா். அவா்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சுயதொழில் நிதியுதவி, முதியோா் உதவித் தொகை வழங்கக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

மறியல்
மனு கொடுத்தபிறகு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக வந்து, அங்கிருந்த ஆட்சியரின் காா் முன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு இலவச வீடு ஒதுக்கும்படி நீண்டகாலமாக, தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றார்கள். அதையடுத்து, திருநங்கைகளுக்குப் புறநகர் பகுதியில் இலவச வீடு கட்டி கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து இடம் ஒதுக்கியதாகச் சொல்லப்படுகிறது.

மனு வாங்கவில்லை
ஆனால், அது சம்பந்தமான எந்த வேலையும் தொடங்காமல் காலம் கடத்துவதாகத் திருநங்கைகள் தெரிவித்தனர். அதோடு, ஆட்சியருக்கு வீடு கட்டுவது தொடர்பாக மீண்டும் மனு அளிக்க திருநங்கைகள் வந்ததாகவும், அப்போது மனு வாங்கும் இடத்தில் அமர்ந்திருந்த அலுவலர்கள், கலெக்டரிடம் மனுவை கொடுக்க விடாமல் தாங்களே வாங்கி தூக்கி எறிந்ததாக சிவன்யா தலைமையில் புகாரளிக்க வந்த திருநங்கைகள் தெரிவித்தனர். இதையடுத்தே திருநங்கைகள், கலெக்டரின் கார் நிற்கும் இடத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

தீக்குளிக்க முயற்சி
கார் முன்னால் அமர்ந்து மறியல் செய்து கொண்டிருந்த திருநங்கைகள், ஆட்சியர் சங்கர்லால் குமாவத் வந்ததும், அங்கிருந்த திருநங்கை சிவன்யா தன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்துக் காப்பாற்றினர்.

ஆட்சியர் உறுதி
அதன்பிறகு, ஆட்சியர் அவர்களின் பிரச்னையை கேட்டவர், மிக விரைவில் இலவச வீடு கட்டித்தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். அதனால் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரத்துப்போனது.












Click it and Unblock the Notifications