வேற லெவல் மகிழ்ச்சி.. தாம்பரம் தெருக்களில் திடீர் மாற்றம் வருது.. சட்டென சென்னை மாநகராட்சி.. சபாஷ்
சென்னை: சென்னை மாநகராட்சி நாளுக்கு நாள் கலக்கி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், தாம்பரம் மாநகராட்சி சார்பாக, இப்போதும் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரை, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.

தாம்பரம்: இதில், 5 மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகள் உள்ளன. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும், 70 வார்டுகளில் உள்ள தெரு பெயர் பலகைகள், இதுவரை மாற்றப்படவில்லை.
மேலும், நகராட்சி, பேரூராட்சியின்போது வைக்கப்பட்ட பழைய பலகைகளே, பல பகுதிகளில் இப்போதும் உள்ளதாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த மாதம் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி, 5 மண்டலங்களில் 70 வார்டுகளிலும், பெயர் பலகைகளை மாற்றியமைக்க, 5.56 கோடி ரூபாய்க்கு டெண்டர்' விடப்பட்டுள்ளதாகவும், இதில், 2,500 புதிய பெயர் பலகைகள் பொருத்தப்பட உள்ளதாகவும், ஏற்கனவே உள்ள, 2,300 பலகைகளில் பழைய ஸ்டிக்கர்களை எடுத்துவிட்டு புதிதாக ஒட்டப்பட உள்ள நிலையில், இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் கூறப்பட்டது.
மாநகராட்சி: இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 15வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ், புதிதாக தெரு பெயர் பலகைகள் அமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்தில் உள்ள 600 தெருக்களில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 500 தெருகளில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹1.32 கோடி மதிப்பீட்டிலும், 2வது மண்டலத்தில் உள்ள 400 தெருக்களில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 400 தெருக்களில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹90 லட்சத்திலும் நடந்து வருகின்றன.
தெரு பெயர்கள்: 3வது மண்டலத்தில் உள்ள 500 தெருக்களில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 400 தெருக்களில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹1 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும் பணிகள் நடந்து வருகின்றன.
4வது மண்டலத்தில் உள்ள 600 தெருக்களில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 600 தெருக்களில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹1 கோடியே 34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும் பணிகள் நடக்கின்றன.
ஸ்டிக்கர்கள்: 5வது மண்டலத்தில் உள்ள 400 தெருக்களில் புதியதாக தெரு பெயர் பலகை, ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் நிறுவுதல் மற்றும் 400 தெருக்களில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்கள் அமைத்தல் பணிகள் ₹90 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ₹5 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற தெருக்களின் பெயர் பலகைகள் மக்கள் அனைவரும் நகர பகுதிகளை அறிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும். மேலும், மக்கள் சரியான இடத்திற்குச் செல்லமுடிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஷியில் தாம்பரம்: 5.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2500 தெருக்களில் புதிய தெரு பெயர் பலகைகள், 2300 தெருக்களில் ஏற்கனவே உள்ள பெயர் பலகைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது, தாம்பரம் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications