சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகள்.. 50% ரிசர்வேசனை நிறுத்தி வைக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50% இடங்களை ஒதுக்கீடு செய்வதை 10 நாள் நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு தர அனுமதி உத்தரவு நடப்பாண்டுக்கு பொருந்துமா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2021-22-ம் கல்வியாண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த உத்தரவை வரவேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புறங்களிலும் , சிரமமான மலைப்பகுதிகளிலும் கடினமான இடங்களிலும் மற்றும் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு இந்த ஆண்டே செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சமூக நீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப் பெரிய வெற்றி என்று கூறியிருந்தார்.

மருத்துவ படிப்பு கலந்தாய்வு
இந்த நிலையில், நடப்பு 2022-23-ம் கல்வியாண்டுக்கு மொத்தமுள்ள 100 சதவிகித இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதை எதிர்த்தும், தமிழக அரசு 2020ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் 50 சதவிகித இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி, கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி அரசு மருத்துவர்கள் ஸ்ரீஹரிபிரசாந்த் உள்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2021-22-ம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டுகளுக்கு நீட்டிக்கவில்லை எனவும் கூறி, மத்திய அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசுக்கு அனுமதி
தமிழக அரசின் அரசாணைக்கு, உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடுத்த கல்வியாண்டுகளுக்கும் பொருந்தும் என்பதால் கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வக்கீல் சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.

10 நாட்கள் அவகாசம்
இதுசம்பந்தமாக எந்த விளக்கமும் பெறத் தேவையில்லை என மனுதாரர்கள் தரப்பு வக்கீல் சங்கரன் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நடப்பு கல்வியாண்டுக்கு பொருந்துமா என்பதை உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், இதுகுறித்து உச்சநீதிமன்றம், தமிழக அரசோ, மனுதாரரோ விளக்கம் பெற 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

மத்திய அரசுக்கு உத்தரவு
அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications