சீமானுக்கு ஆதரவு-திருமுருகன் காந்தி வீட்டை 2 நாளாக தேடி கண்டுபிடித்து முற்றுகையிட்ட தமிழர் கட்சி!
சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்பினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக சென்னை அடையாறில் உள்ள மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் வீட்டை தேடிக் கண்டு பிடித்து தமிழர் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தி உள்ளனர்.
தந்தை பெரியார் தமிழ் மொழியை இழிவுபடுத்தினார்; தமிழர்களை இழிவுபடுத்தினார்; பெரியார் தமிழருக்கு எதிரானவர் என தொடர்ந்து பேசிவருகிறார் சீமான். இத்தகைய சீமானின் பேச்சுக்கு ஆதாரங்களை பெரியார் இயக்கத்தினர் கேட்டுப் பார்த்தனர்; போராடினர்; ஆனால் சீமான் தரப்பில் இருந்து ஆதாரங்கள் தரப்படவில்லை.

இந்த நிலையில் சீமான் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவதாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இந்தக் கூட்டமைப்பில் 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
சென்னை நீலாங்கரையில் இன்று சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் தடுத்து நிறுத்து கைது செய்யப்பட்டனர். அப்போது சீமானின் உருவப்படத்தை துடைப்பம், காலணிகளால் அடித்து முழக்கம் வைத்தனர்; சீமானின் படத்தை வைத்து ஒப்பாரியும் வைத்தனர்.
இதற்கு எதிராக சீமான் வீட்டைச் சுற்றி உருட்டுக்கட்டைகளுடன் நாம் தமிழர் கட்சி ஆண்- பெண் நிர்வாகிகள் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். சீமான் வீட்டுக்கு நேற்று இரவு முதலே நாம் தமிழர் கட்சியினர் வருகை தரத் தொடங்கினர். சீமான் வீட்டுக்கு வந்த நாம் தமிழர் கட்சியினருக்கு காலையில் சைவ உணவு வழங்கப்பட்டது. நண்பகலில் பிரியாணி வழங்கப்பட்டது.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சென்னை அடையாறில் உள்ள மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் வீட்டை தேடி கண்டுபிடித்து சீமான் வீடு முற்றுகைக்கு பதிலடியாக அவரது வீட்டை தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். இது தொடர்பாக தமிழர் கட்சியினர் கூறுகையில், திருமுருகன் காந்தியின் வீட்டை 2 நாட்களாக அடையாறில் உள்ள ஒவ்வொரு தெருவாக தேடி அலைந்து கண்டுபிடித்தோம். பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி; அவர் தலைவர் அல்ல. தமிழ்த் தேசியத்தின் தலைவரான சீமானை இழிவுபடுத்துவதையும் எதிர்ப்பதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்பதாலேயே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது எனவும் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications