Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென ‘நம்பர்’ கேட்ட சுப்ரீம் கோர்ட்.. “கேட்டு சொல்றேன்”.. எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் எத்தனை பேர் பங்கேற்றனர் என உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், தனது மனுதாரரை கேட்டுச் சொல்வதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு முன்வைத்த வாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று பலமான வாதங்களை எடுத்து வைத்தது ஈபிஎஸ் தரப்பு.

குறிப்பாக, பொதுக்குழு உறுப்பினர்கள் என்பவர்கள் அடிப்படைத் தொண்டர்களின் பிரதிநிதிகள் தான், எல்லாவற்றிற்கும், ஒன்றரைக் கோடி உறுப்பினர்களிடம் செல்ல முடியாது என்பதால் தான் பொதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது, பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை அடிப்படை உறுப்பினர்களின் முடிவாகத்தான் பார்க்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஒட்டுமொத்த கட்சியும் ஒரு திசையில் இயங்க ஓபிஎஸ், வைரமுத்து மட்டும் வேறு திசையில் இயங்குவதாகவும் ஈபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு இன்றைக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

 இறுதிகட்ட விசாரணை

இறுதிகட்ட விசாரணை

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். ஆனால், ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. ஜனவரி 4ஆம் தேதி முதல் ஓபிஎஸ், வைரமுத்து தரப்பு வாதங்களை எடுத்து வைத்த நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை முன்வைத்தது.

 எல்லாத்துக்கும் அங்கே போகணும்

எல்லாத்துக்கும் அங்கே போகணும்

அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதங்களை முன்வைத்தார். ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை மறுத்து ஆர்யமா சுந்தரம் வாதாடினார். ஒன்றரைக் கோடி தொண்டர்கள் மூலம்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கூறுவதாக இருந்தால் அனைத்து விவகாரங்களிலும் தொண்டர்களிடம்தான் செல்ல வேண்டி இருக்கும். ஆனால் அது மிகவும் சிரமமான காரியம் என்பதால் தான் பொதுக்குழுவிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என வாதிட்டார்.

 அடிப்படை உறுப்பினர்களிடம்

அடிப்படை உறுப்பினர்களிடம்

மேலும், தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் பொதுக்குழுவில் சேர்க்கப்படுகிறார்கள் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கூட அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது நீதிபதிகள், விகிதாச்சார அடிப்படையில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருந்தாலும் பிரச்சனை வரும்போது அடிப்படை உறுப்பினர்களிடம்தான் விவகாரத்தை கொண்டு செல்லலாம் என ஓபிஎஸ் தரப்பு கூறுவதும் கவனம் கொள்ளக்கூடியது தானே? என கேள்வி எழுப்பினர்.

 இப்போ மட்டும் சொல்றாரே

இப்போ மட்டும் சொல்றாரே

இந்த கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதுதான் தற்போதும் பின்பற்றப்பட்டது, அந்த பதவிகளை உருவாக்கியதும் அதிமுக அடிப்படை தொண்டர்களால் அல்ல பொதுக்குழு உறுப்பினர்களால்தான். அப்போது எதிர்ப்பு தெரிவிக்காத ஓபிஎஸ், தற்போது மட்டும் ஏன் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகள் தான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள். எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை அடிப்படை உறுப்பினர்களின் முடிவாகத்தான் பார்க்க வேண்டும் என வாதிட்டார்.

 வழக்கு இருக்கு

வழக்கு இருக்கு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. தகுதி நீக்கம் செய்தது குறித்து சம்பந்தம் இல்லாமல் ஓ.பி.எஸ் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது. பொதுக்குழு கூட்டத்தன்று ஓ.பி.எஸ் தரப்பு கட்சியின் தலைமை அலுவலகத்தை தாக்கி, உள்ளிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அதற்காக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

 ஒற்றைத் தலைமை ஏன்?

ஒற்றைத் தலைமை ஏன்?

மேலும், ஒற்றைத் தலைமை கோரிக்கை ஏன் எழுந்தது என்பது குறித்தும் எடப்பாடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இரட்டை தலைமையில் ஆளுக்கு ஒரு கருத்து இருக்கும், முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எனவே தான் கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றை தலைமை என முடிவு எடுக்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.

 150 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

150 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினர் பங்கேற்றனர். ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக செய்யப்பட்ட அறிவிப்புக்கும் ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் பங்கேற்ற 2,460 உறுப்பினர்கள் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இது மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 94.5% ஆதரவு ஆகும். இந்த பொதுக்குழுவில் 150 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை எனத் தெரிவித்தார் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்.

 கேட்டுச் சொல்கிறேன்

கேட்டுச் சொல்கிறேன்

மேலும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட 82 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். 5ல்1 பங்கு ஆதரவு அதாவது 20 சதவீதம் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தாலே போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், சரியான உறுப்பினர்களின் எண்ணிக்கையை மனுதாரரிடம் கேட்டு தெரிவிப்பதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று (ஜனவரி 11), அதிமுக தலைமைக் கழகம், அதிமுக தலைமை நிலைய செயலாளர் ஆகியோர் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+