உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழ்நாட்டை புறக்கணிக்க கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நால்வரின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்த போஸ், கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போபண்ணா, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் திறமை குறித்தோ, அனுபவம் குறித்தோ யாருக்கும் ஐயம் இல்லை.
ஆனால் இவர்களின் சொந்த உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள் பலர் ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் அந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கே உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்
ஒரு காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த 3 நீதிபதிகள் ஒரே நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக ஒருவர் கூட உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வில் அனுப்பப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கொல்கத்தாவில் பயங்கர மோதல்... பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு
சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி பால்வசந்தகுமார் அவர்களுக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் கூட அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்குப் பின் இப்போதுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி. சுதாகர், இராமசுப்பிரமணியன், மணிக்குமார், சுப்பையா, சத்யநாராயணா உள்ளிட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியானவர்கள்.
இந்தியாவின் மூத்த உயர்நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் புறக்கணிக்கப்படும் போக்கு உடனடியாக கைவிடப்பட வேண்டும். வரும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதி பணியிடங்கள் ஏற்படவிருக்கும் நிலையில், அவற்றில் தகுதியான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.