ஒரு பாலின திருமணம் சட்டப்பூர்வமாகுமா? விசாரணை நிறைவு- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
சென்னை: ஒரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை இன்று ஒத்திவைத்தது.
ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்தது.

திருமணம் என்பது ஒரு ஆண், பெண் இடையேயான உயிரியல் ரீதியான உறவு. இத்தகைய உறவுகளுக்கு அப்பாலான தன்பாலின அல்லது ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் என்பது புதிய சட்டம் இயற்றுதலாகும். ஒருதரப்பு வாதத்தை மட்டுமே உச்சநீதிமன்றம் கேட்கவும் கூடாது என்றது மத்திய அரசு.
ஆனால், ஒரு ஆண், பெண் அவர்களது பிறப்பு உறுப்பு தொடர்பானது அல்ல இந்த வழக்கு. இத்தகைய வழக்குகளில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றத்தை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. பொதுவான திருமண சட்டத்தில் இருந்து விலகி சிறப்பு திருமண சட்டத்தில் ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு நிவாரணம் வழங்க முடியுமா? என்பதை நீதிமன்றம் ஆராய்கிறது என்றார் தலைமை நீதிபதி சந்திரசூட்.
மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, என் தரப்பினரின் திருமண உரிமையை மறுப்பது என்பது குடியுரிமையை மறுப்பதாகும். அப்படியானால் இதர குடிமக்களுடன் இணைந்தவராக இல்லாமல் ஒரு குற்றவாளியாக கருதப்படுவார். இது தவறான அணுகுமுறை என்றார். இந்த வழக்கில் இன்றும் உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்கள் இடம்பெற்றன. மாநில அரசுகள் அனைத்தையும் வழக்கில் சேர்த்து கருத்து கேட்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் மாநில அரசுகளின் கருத்துகளையும் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. மாநில அரசுகளும் தங்களது கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து விசாரணைகளையும் நிறைவு செய்தது. அத்துடன் இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications